Sunday, December 30, 2018

வயல்காட்டு இசக்கி - விஜய் பாஸ்கர்விஜய்

Pioneer என்றால் முதலில் கண்டுபிடித்தது, முதலில் செய்தது... இப்படி முதலில் யார் தொடங்கியது என்ற அர்த்தமாகும்...
வயல்நிலப் பிரச்சனை ஒன்றை நண்பர் விளக்கிக் கொண்டிருந்தார்.
”நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள். ஊரில் உங்கள் நிலத்தில் பிரச்சனை செய்வதே உங்கள் சொந்தங்கள் என்கிறீர்கள். யார் உங்களுக்கு ஊர் தகவலை இவ்வளவு அக்கறையாக சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.
“காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக எங்கள் வயலை கவனித்துக் கொள்பவர் அதை சொல்லுவார். அவருக்கு வயல் மேல் அதிக ஆர்வம். அதுதான் அவர் உலகம்” என்றார்.
பரம்பரை பரம்பரையாக தனக்கென்று சொந்த வயலே இல்லாமல் உழைப்பை எல்லாம் கூலிக்கு கொட்டி வேலை செய்து வந்தாலும்,
வயல் நிலத்தை சொந்தம் கொண்டாடுபவர்களால் சுரண்டுப்பட்டாலும் அந்த உழவுத்தொழில் மேல் இருக்கும் ஆர்வமும் நிலத்தை முதலாளிக்காக காக்க வேண்டும் என்ற ஆர்வமும் மிகுதியானது.
அது ஒரு குணமாக பரம்பரை பரம்பரையாக வளர்த்து எடுத்துக்கப்பட்டிருக்கிறது...
அ.கா பெருமாள் எழுதிய ”வயல்காட்டு இசக்கி” என்ற கட்டுரையில் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.
வயல்காட்டில் இருக்கும் இசக்கி பற்றிய கதை.
கூலி வேலை செய்யும் பெண் தன் குடிசை வெளியே வயலைப் பார்க்கிறார்.
மழை பெய்து கொண்டிருக்கிறது. வயலுக்கு தெற்கே உள்ள குளம் ஒன்று நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது.
குளம் உடைந்தால் குடிசைக்கு ஒன்றுமில்லை. அது மேட்டில் இருக்கிறது. ஆனால் வயலுக்கு பிரச்சனை.
விளைந்தது எல்லாம் மூழ்கிவிடும். எப்படியாவது வயல் தானியத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த அப்பெண் தன் சிறு மகனை குடிசையில் வைத்து விட்டு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு குளத்தின் அந்த பக்கம் உடைத்து விடப் போனாராம்.
அப்பக்கம் உடைத்தால் நீர் ஆற்றில்தான் போய் கலக்கும். வெள்ளம் வராது.
அப்படி கொத்தி குளக்கரையை உடைக்கும் போது வெள்ளம் பெருக்கெடுத்து அப்பெண்ணையும் அடித்துச் சென்றது.
மறுநாள் காலை கணவன் வந்து மனைவியைப் பார்த்தால் வெள்ளத்தால் அடிபட்டு இறந்து கிடக்கிறார் மனைவி.
மனைவியை கட்டிக்கொண்டு அழும் போது அவர் மேடான வயிற்றை தடவி தடவி அழுதாராம் கணவன்.
அப்போது வயிற்றில் குழந்தை இருந்தது அதன் பிறகுதான் ஊருக்கு தெரிந்திருக்கிறது.
வயிற்றுப்பிள்ளையோடு இறந்தப் பெண்ணை ஆற்றுப்படுத்த அவரை அம்மனாக்கி பூஜை செய்து வருகிறார்களாம்.
அதுதான் வயல்காட்டு இசக்கியின் கதை.
- முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலை செய்ய வேண்டும்.
- ஏன் எதற்கு என்று கேட்காமல் கூலி எதிர்பாராமல் வேலை செய்ய வேண்டும்.
- பரம்பரை பரம்பரையாக வேலை செய்ய வேண்டும்.
- உயிரைக் கொடுத்தாவது, வயிற்றில் குழந்தை இருந்தால் கூட உயிரைக் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.
இதெல்லாம் அக்காலத்தில் வயலில் கூலி வேலை செய்யும் மக்களின் உணர்வில் ஊறி இருந்தது.
கூலி வேலை செய்பவராக பிறந்தாலே இதையெல்லாம் செய்துதான் ஆகவேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்படி பரம்பரை பரம்பரையாக வயலை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பரம்பரை பரம்பரையாக வேலை செய்து கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம்.

Related image
இப்படி எத்தனை லட்ச மக்கள் இருந்திருப்பார்கள்.
அவர்களிடம் எல்லாம் சென்று
“இல்லை நீங்கள் தொழிலாளி அவர் முதலாளி அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு. நீங்கள் அடிமை இல்லை. தொழிலாளர்களுக்குள்ள உரிமை அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து பேசி பேசி, புரிய வைத்து அவர்களை பெருந்திரளான போராட்ட சக்தியாக மாற்றுவது எவ்வளவு கடினமான வேலை.
அப்படி பெருந்திரளாக்க எத்தனை பேர் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள்.
அடித்தட்டு மக்களை அறிவான அறிவாக விழிப்படைய வைக்கும் கலையை முதலில் தொடங்கி வைத்தது அவர்கள்தாம் என்று நம்புகிறேன்.
கொஞ்சம் தகவலை தெரிந்து கொண்டு உலகைப் பார்க்கும் எளிய அறிவுடையவனாக
இதைத்தான் கம்யூனிஸ்டுகளின் முக்கியமான
சிறப்பான பங்களிப்பாக பார்க்கிறேன்.

கிரிஞ் மலை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பாஸ்கர்விஜய்

Grinch கதையில்
கிரிஞ் மலையில் இருந்து கொண்டு ஊரார் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவை கெடுக்கிறான்.
அவர்கள் கொண்டாடும் விழாப் பொருட்களை திருடி வந்து விடுகிறான்.
ஏன் கிரிஞ் இப்படி ஊரார் மேலே கடுப்பாய் இருந்தான் என்றால் சிலர் காரணமே இல்லாமல் என்கிறார்கள்.
பலர் கிரிஞ்சை ஒருகாலத்தில் ஊரார் அவமானப்படுத்திவிட்டார்கள், அடித்து துரத்தி விட்டார்கள் அதனால்தான் அவன் அப்படி செய்கிறான் என்கிறார்கள்.
அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” தான் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கிறான்.
ஏதோ ஒரு வெறுமையில், எரிச்சலில், கடுப்பில் எந்திர துப்பாக்கியை எடுத்து வந்து தன் பள்ளியில் சுட்டு விடுகிறார்கள்.
சட்டு சட்டென்று பத்து பதினைந்து உயிர்கள் விநாடி நேரத்தில் இல்லாமல் போய்விடுகின்றன.
இதனாலே அங்கே “மனநலம்” பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
அந்த மனநலம் பிரச்சாரத்தை அரசே முன்னெடுப்பதின் முக்கிய நோக்கம் தனிமனிதர்களின் நன்மையா? இருக்கலாம்.
தனி மனிதர்கள் மேல் அரசு அக்கறை எடுக்கலாம். ஆனால் அதை விட நன்மை சமூகத்துக்குதான்.
அவர்கள் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” ஆக ஆனால் அது சமூகத்துக்கு கேடு.
கிரிஞ்சால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
”திகைத்திருக்கும் தனிமனிதன்” னால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
அப்படியானால் குறிப்பிட்ட சமூக மக்களால் இன்னொரு சமூக மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை என்கிறோம்...
இஸ்ரேல் ஜனக்தொகை - 88 லட்சம்
பாலஸ்தீன் ஜனத்தொகை - 44 லட்சம்.
இஸ்ரேலுக்கு மும்பை அளவு ஜனத்தொகைதான். பாலஸ்தீனத்துக்கு சென்னை அளவு ஜனத்தொகைதான். ஆனால் சண்டை என்று முட்டிக்கொள்ளும் போது எவ்வளவு கொடூரமான விஷயங்கள் அங்கே நடைபெறுகின்றன.
இலங்கை பிரச்சனையின் கொடூரம் அறியாதவரே இருக்க முடியாது. புள்ளிவிபரம் இலங்கை தமிழர் ஜனத்தொகை முப்பது லட்சத்துக்குள்தான் என்று சொல்கிறது.
இவ்வுலகில் எங்கெல்லாம், எந்த நாட்டில் எல்லாம் சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம் யார் கோபப்படுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே ஜனத்தொகையில் சிறுபான்மை மக்களாக இருப்பவர்கள்தான் கோபப்படுவார்கள்.
அவர்கள் என்ன சும்மா கோபப்படுகிறார்களா என்ன ? இலங்கை தமிழர்களும், பாலஸ்தீனர்களும் சும்மாவா கோபப்பட்டார்கள், படுகிறார்கள்.
இல்லை. தொடர்ச்சியாக பெரும்பான்மை மக்கள் அவர்கள் மேல் வைக்கும் உரிமை மறுப்பு, அழுத்தம், அவமானம், வலி எல்லாம் சேர்ந்து அப்படியான நிலைக்கு அவர்களை தள்ளுகிறது.
சிறுபான்மையினரை மதித்தல், அல்லது அவர்களுக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுத்தல் என்பது அவர்கள் மேல் பாசம், அன்பு, சகோதரத்துவம் என்பதை விட அது சமூகத்துக்கு நல்லது என்பதுதான் நாம் அடைய வேண்டிய முக்கிய புரிதல்.
ஒரு கல்லூரி இளைஞராக உங்களுக்கு சண்டை, பிரச்சனை எல்லாம் கேட்க சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அருகில் சென்று பார்த்தால் அங்கே மக்கள் எவ்வளவு நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரியும்.
அவர்கள் எல்லோருமே முதலில் நீங்கள் சொல்வது மாதிரி “ துலுக்கனைப் பாரு, பாவாடைகளை பாரு” என்று சிறுபான்மையினரை அவமானப்படுத்துவதில்தான் ஆரம்பித்திருப்பார்கள்.
வேறு வழியில்லாமல் சிறுபான்மை சமூகம் பதிலுக்கு செயலாற்ற வேண்டியது வரும் போது அந்த அந்த நாடே வன்முறைக்காடாகி விடும்.
சிறுபான்மையினர் நலம் பேணுதல் என்பது அவர்கள் நலத்துக்காக இல்லை. அது சமூக நலத்துக்காக என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இந்தியா அம்பேத்கர் கண்ட இந்தியவாக இருக்கும்.
இங்கே அன்பு யாருக்கும் தேவையில்லை. அடிப்படை நாகரிகம் போதும்...
சிறுபான்மையினரை இங்கே யாரும் கொஞ்ச வேண்டாம்..
அடிப்படை நாகரிகத்துடன் அவர்களுடன் நடந்து கொண்டால் போதும்.
தமிழக அரசு தொடர்பு நிறுவனமான ஆவின் பால் பாக்கட் கவரை பாருங்கள்.
வரவேற்கத்தக்க செயல் இது...
தமிழக கிறிஸ்தவர்கள் மேல் அரசாங்கத்துக்கு அவ்வளவு பாசமா என்ன?
இல்லை...
ஆனால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்க இது சம்பிரதாயம், பண்பாடு..
எல்லோரும் வசதியாக இருக்க ஒரு ஏற்பாடு...
இந்தக் கருத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு
கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொடர்ச்சியாக உரையாடினால்
ஒரளவுக்கு
மத அடிப்படைவாதிகளிடம் இருந்து இளைஞர்களை காப்பாற்றலாம்...

No automatic alt text available.

Saturday, December 29, 2018

ஒஹ்ஹ் - விஜய் பாஸ்கர்விஜய்

சினிமாவில்
பயந்து ஒஹ்ஹ் என்னும் காட்சிகளில் ஒரு அலறல் சத்தம் கேட்கும்
கவனித்திருக்கிறீர்களா?
கொஞ்சம் க்ரீச் குரல் கலந்த சத்தமான ஆஹ்ஹ் என்ற குரல். இந்த லின்க்கை திறந்து நடுவில் அழுத்தினால் கேட்கலாம்
இதை Wilhelm scream effect என்கிறார்கள்.
http://www.wilhelmscream.net/
இது இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுக்கவே முடியாது. அதிர்ச்சி கலந்த அலறலை இந்த குரலில் மூலமாக மட்டுமே சொல்லமுடியும்.
இன்று வரை இந்த Sound effect கண்டுபிடித்தது யாரென்று தெளிவாக சொல்லமுடியவில்லை.
முதன் முதலில் இதை 1951 ஆம் ஆண்டு Distant Drums என்ற திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆற்றை நடந்து கடக்கும் போர்வீரர்களில் ஒருவனை நீரின் அடியில் இருந்து இழுக்கும் முதலை. https://www.youtube.com/watch?v=dc5F2C0CYlA
அப்படி இழுக்கும் போது அவன் அதிர்ச்சியில் அலறும் போது இந்த Wilhelm scream effect ஐ முதலாக உபயோகித்திருக்கிறார்கள்.
ஆனால் 1951 யில் மக்கள் மத்தியிலோ, ஊடகங்களிலோ இது பிரபலம் ஆகவில்லை.
யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.
அடுத்து 1953 யில் The Charge at feather river
https://www.youtube.com/watch?v=q3-Y8eTaMZc
திரைபடத்தில் இந்த Wilhelm scream effect அடுத்தடுத்து உபயோகித்திருக்கிறார்கள்.
அப்போதுதான் மக்கள் “அட இது என்னது வித்தியாசமா ஆனா பொருத்தமா” என்று அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்கள்.

Image may contain: text
The Charge at feather river படம் வரும் வரை Wilhelm scream effect க்கு எந்த பெயருமே கிடையாது.
அந்தப் படம் வந்து மக்கள் கவனம் பெற்ற பிறகு அப்படத்தில் அலறும் கேரக்டரான Private Wilhelm பெயரையே இந்த சிறப்பு ஒலியின் பெயராக ஆக்கிவிட்டார்கள்.
இப்போதுவரை இந்த Wilhelm scream effect இல்லாமல் பெரும்பான்மையான படங்களை எடுக்க முடியாது என்பதுதான் இவ்வொலியின் சிறப்பாகும்...

Friday, December 28, 2018

டேனியலும் ஆடும் சிறார் கதை - விஜய் பாஸ்கர்விஜய்

உயரமான மலையடிவாரத்துல
இருக்கிற ஒரு சின்ன டவுன். சரியா.
கற்பனை பண்ணிக்க.
அங்க டேனியல்னு ஒரு பையன்.
டேனியல் என்ன படிக்கிறான். பத்தாங் கிளாஸ் படிக்கிறான்.
டேனியல் இப்ப மலைல ஏறுறான்.
ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஸ்கூல் நேரத்துல ஏன் டேனியல் மலைல வளைஞ்சு வளைஞ்சு போறான்.
ஏன் போறான்னா அவனுக்கு ஸ்கூலுக்கு போக இஷ்டமில்ல.
ஏன் இஷ்டமில்ல. ஏன்னா அவன் வகுப்ப கவனிக்கலன்னு வாத்தியார் அவன திட்டிட்டாரு.
அதனால நாலு நாளா அவன் ஸ்கூலுக்கு போகாம மலைல ஏறி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போயிருவான்.
அன்னைக்கு டேனியலுக்கு ரொம்ப சோகமா இருக்கு. இனிமே உயிர் வாழக்கூடாது செத்து போகனும் அப்படின்னு சொல்லிட்டு மலை உச்சில ஏறுறான்.
குதிக்க போகும் போது
“ எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா”
அப்படின்னு ஒரு குரல் கேக்குது.
அது ஒரு செம்மறி ஆடு.. Wool Sheep. கம்பெளி கொடுக்குமே அந்த ஆடு.
“என்ன உதவி” டேனியல்.
“உன்னப் பொறுத்தவரை இது கெட்ட நாளா இருக்கலாம். ஆனா என்ன பொறுத்தவரை இது நல்ல நாள். நான் கொண்டாட்டத்துல இருக்கேன். நீ என்னோட வந்து அதுல கலந்துக்க முடியுமா. கலந்துகிட்டு நீ செத்துப் போ நா தடுக்க மாட்டேன்”
டேனியலும் செம்மறி ஆடு கூட போறான்.
அங்க குகைல நிறைய பழங்கள், உணவுகள் எல்லாம் இருக்குது.
“உன் பேரு என்ன”
“டேனியல்”
“சாப்பிடு டேனியல்”
“என்ன கொண்டாட்டம் உனக்கு. காரணம் என்ன”
“என்ன என் முதலாளி ஏத்துகிட்டார் டேனியல்”
“நீ என்ன தப்பு பண்ணின”
“நான் ஒரு கம்பளி கொடுக்கும் ஆடும். என் உடல்ல வளர்ற கம்பளிய என் முதலாளி எடுத்து விலைக்கு வித்திருவாரு. அதுல அவருக்கு வருமானம் கிடைக்கும்”
“ம்ம்ம்”
“ஒருநாள் நினைச்சேன். நான் ஏன் இவருக்கு என் உடம்புல உள்ள கம்பளியை கொடுக்கனும். அப்படி சொல்லிட்டு அவருக்கு தெரியாம மலைல ஒளிஞ்சிகிட்டேன்”
“உன் முதலாளி தேடலியா”
“தேடுனாறு. நான் ஒளிஞ்சிகிட்டேன்”
“உன்ன மத்த விலங்குகள் தொரத்தலியா”
“நாலு நாள் சமாளிச்சிட்டேன். அப்புறம் ஒரு காட்டுநாய் ஒண்ணு தொரத்திச்சு. ஆனா தப்பிச்சிட்டேன்”
“அப்பவாவது நீ முதலாளிகிட்ட போக வேண்டியதான”
“முதலாளி திட்டுவாருன்னு போகல”
“ம்ம்ம்”
“கொஞ்ச நாள் போச்சு. மறுபடி போகலாம்னு நினைச்சேன் போகல. முதலாளியோட நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோனு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“அடுத்து எனக்கே என் மேல வெக்கமா இருந்துச்சி. இப்படி முதலாளிக்கு துரோகம் பண்ணுறியோன்னு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“இப்படி ஒவ்வொன்னா கற்பனை பண்ணிகிட்டு மலையே தங்கிட்டேன்”
“ஒஹ்”
“அப்ப எனக்கு உடம்புல கம்பளி அதிக வளந்து போச்சு. என் எடைய விட அதிகமா கம்பளி வளந்து போச்சு.என்னால அத தூக்கிட்டு நடக்கவே முடியல.”
“என்ன பண்ணின”
“இப்ப போனா உனக்கு வசதி இல்லாம இருக்கும் போது மட்டும் வர்றியான்னு முதலாளி கேட்டிருவாரோன்னு நினைச்சி போகல. அப்படியே நடக்க முடியாம குகைல அடைஞ்சி சோர்ந்து கிடந்தேன்”
“ம்ம்ம்”
“ஒருநாள் தற்செயலா மலை உச்சிக்கு வந்த என் முதலாளி என்ன அடையாளம் கண்டுகிட்டு “செல்லம் நீ இங்க இருக்கியான்னு என்ன வந்து அப்படியே அணைச்சிகிட்டார்”
“ம்ம்ம்”
“முதலாளி என்ன வாஞ்சையா அணைச்சிக்கும் போது எனக்கு கண்ணீரா வருது. நா ஏங்கி ஏங்கி அழுறேன். முதலாளியும் அழுறார். என்கிட்ட உனக்கு என்ன வெக்கம். நா உன்ன என்ன நினைக்கப் போறேன் அப்படின்னாரு”
“ம்ம்ம்”
“அப்புறம் வண்டில வெச்சி என்ன கீழ கூட்டிட்டு போய் உடம்புல உள்ள கம்பளி எல்லாம் எடுத்து என்ன இலகுவாக்கி விட்டார் டேனியல்”
“கேக்கவே நல்லா இருக்கு”
“நீ உன் கதையை சொல்லு டேனியல்”

Image result for boy and sheep
டேனியல் அவன் கதையை சொன்னான்.
”நீயும் என்ன மாதிரியே நினைச்சிட்டு ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். இன்னைக்கு போகாதத்துக்கு வெக்கபட்டு நாளைக்கு போகாம இருந்து, நாளைக்கு போகாம இருந்ததுக்கு வெக்கப்பட்டு நாளன்னிக்கு போகாம இருந்துட்டு இப்படி நீ இருந்தா அப்புறம் வாரக்கணக்குல ஸ்கூலுக்கு போகாம போயிருவ. அப்புறம் இனிமே படிப்பே வேணாம்னு சொல்லிருவ”
“அப்ப என்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. நா தப்பு பண்ணலியா” இது டேனியல்
“நீ ஒரு தப்பும் பண்ணல டேனியல். அப்படியே தப்புன்னாலும் இது மன்னிக்க முடியாத தப்பு இல்ல. அதுக்கு பயந்து ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். போ உன் வாத்தியார் உன்ன ஒண்ணுமே சொல்ல மாட்டார்”
செம்மறி ஆடு இப்படி சொன்னதும் டேனியல் மனசு லேசாகி தைரியமா அவன் ஸ்கூலுக்கு போறான்.
அன்னைக்கே மதியம் இரண்டு மணிக்கே போறான்.
வாத்தியார் முன்னாடி போய் நிற்கிறான்.
வாத்தியார் டேனியலப் பாக்குறார்.
ஏன் வரல எதுக்கு வரலன்னு எதுவும் கேக்கல
அன்பா பாக்குறார்.
ஒண்ணுமே சொல்லல.
“போ டேனியல் உன் இடத்துல உக்காந்து க்ளாஸ கவனி” அப்படிங்கிறார்.
டேனியல் சந்தோசமா போய் க்ளாஸ் கவனிக்கிறான்.
இவ்வளவு சின்ன விசயத்த ரொம்ப கற்பனை பன்ணிகிட்டு ஸ்கூலுக்கு போகாம இருந்தோமேன்னு நினைச்சி வெக்கப்படுறான்.
அவனுக்கு அறிவு கொடுத்த மலை உச்சி செம்மறி ஆட்டுக்கு நன்றி சொல்றான்.
தன் கம்பளி எல்லாத்தையும் எடுத்து தன்னோட பாரத்தை எல்லாம் ஒரு விநாடில நீக்குன தன்னோட க்ளாஸ் சாருக்கும் மானசீகமா நன்றி சொல்றான்.
பக்கத்துல நிக்கிற வேப்பரம் மரம் காத்துல அசைது,
வேப்ப மரக்காத்து,
செம்மறி ஆடு அட்வைஸ்,
வாத்தியாரோட கனிவு
எல்லாம் சேர்ந்து டேனியல் சுகந்தமா அத அனுபவிக்கிறான்...
அதோட கதை முடியுது சரியா...
#டேனியலும் ஆடும் சிறார் கதை...

மாட்டு அரசியல் - விஜய் பாஸ்கர்விஜய்

உத்திரபிரதேசம் மாநிலம்
அலிகார் நகரில் உள்ள இக்லஸ் (Iglas) என்னுமிடத்தில் ஆதரவற்ற மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதாம்.
விவசாய பூமியான இக்லாஸில் உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுகிறார்கள்.
வட இந்தியா முழுவதும் இப்படி தெருவில் விட்டு விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
அப்படி தெருக்களில் விடப்படும் ஏராளமான மாடுகளால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்.
தொல்லை தாங்க் முடியாத மக்கள் மொத்தம் 800 மாடுகளை அங்குள்ள அரசுப் பள்ளிகள் காம்பவுண்ட் உள்ளேயும், வகுப்பறையும் உள்ளேயும் கட்டி வைத்து போய்விட்டார்கள்.
காலையில் வந்து பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப் பார்த்து திகைத்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் விடுமுறை விட்டிருக்கிறார்கள். காவல்துறையும் கலெக்டரும் இது அரசியல் என்கிறார்கள்.
ஆனால் பொதுமக்களோ இப்படி திரியும் மாடுகளை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இதில்லாமல் சில மாடுகளை அங்கே உள்ள மக்கள் உயிருடன் புதைத்திருக்கின்றனர்.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் மூச்சு திணறி மாடுகள் இறந்ததாக வந்திருக்கிறது.
https://timesofindia.indiatimes.com/…/articles…/67277967.cms
 Image may contain: one or more people, people standing, people walking and text

மாடுகளை கொல்லக் கூடாது அது மதத்தின் படி மகா பாவம் என்று சொன்ன மக்கள் இன்று மாடுகளை உயிருடன் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உணவு சங்கிலி, ஒரு நாட்டில் உள்ள அனைவரும் எப்படி எதை உண்கிறார்கள். இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி எல்லாம் ஒவ்வொருவேளையும் பசியாறுகிறார்கள் என்பதை எல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக தெரிந்தவர்கள் மாட்டுக்கறியை எதிர்க்க மாட்டார்கள்.
வெறுமே மத அபிமானிகள் மாட்டுக்கறியை எதிர்ப்பார்கள். மாடு உண்பவர்களை கொல்லுவார்கள்.
இப்போது பாருங்கள் மதவாதிகளே ஒட்டுமொத்தமாய் தெய்வமாக வணங்கும் மாட்டையே உயிருடன் புதைக்கிறார்கள்.
உயிருடன் புதைக்கப்படும் போது அம்மாடுகள் அடைந்திருக்கும் மூச்சுத்திணறலை நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு கொடுமை அது...
ஜி.எஸ்.டி வரி மாதிரி ஒவ்வொரு மக்கள் செலவுக்கும் “மாட்டு வரி” என்று ஒன்று வைத்து இம்மாடுகளை காப்பாற்றுகிறேன் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும்.
மிக இயல்பான ஒரு விஷயம் உணவு...
அமெரிக்கர்கள் போல மாட்டுக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
சீனர்கள் போல பன்றிக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
நம்மை விட அவர்கள் எவ்விதத்தில் குறைந்து விட்டார்கள்.
மனிதநேயம், பண்பாடு, பிறரை மதித்தல் இதில் கூட அவர்கள் நம்மை முந்தியே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது.. பன்றிக் கறி சாப்பிடக் கூடாது... எவ்வளவு மனத்தடைகள்...
படித்த மக்களே திருந்துங்கள்... யோசியுங்கள்...
மாட்டின் பாலைக் குடிக்கிறீர்கள்... புரோட்டீன் சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்..
அது போல மாட்டுக்கறியை உண்டு புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு...
உங்களுடைய மதக்கொள்கையால் வடமாநிலங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் சத்துணவில் முட்டை கூட சாப்பிட முடியாமல் தவிக்கின்றன...
நாம் சொல்லும் ஸ்லோகங்கள் எல்லாம்
எத்தனையோ குழந்தையின் தட்டில் உள்ள
சத்தான உணவை தினமும் பிடுங்கி தூர எறிந்து அவர்களின் உணவின் மேல் கைவைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..
ஆனால் அதுதான் உண்மை...

Saturday, December 22, 2018

டிசம்பர் 22 கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் - Vijay Bhaskarvijay

டிசம்பர் 22
கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள். ❤️❤️
பள்ளி நாட்களில் இத எல்லோரும் அனுபவிச்சிருப்போம்.
திடீருன்னு மத்யானம் கிளாஸ் கிடையாதுன்னு சொல்வாங்க. எல்லாரையும் பெரிய ஹால்ல அல்லது மைதானத்துல உக்கார வைப்பாங்க.
எதாவது பொம்மலாட்டமோ, சின்ன படமோ போடுவாங்க.
அப்படி ஒருதட எங்க ஸ்கூலுக்கு ஒருத்தர் வந்து பேப்பர் கட்டிங் செய்து காட்டுனாரு.
சின்ன வயசுல எனக்குள்ள பெரிய மலர்ச்சியக் கொடுத்தது அவரு நடத்தின அந்த நிகழ்ச்சி. ஒரு பேப்பர எடுத்து நீண்ட்ட்ட நீள் சதுரமா கிழிச்சி, அத சுருட்டுனாரு. கத்திரிகோலால வரிசையா பாதிவரை வெட்டினாரு. சுருளப் பிடிச்சி இழுத்தாரு. அப்படியே அழகான நீளமான பூவா ஆகிடிச்சி. அது மாதிரியே பேப்பர்கள்ல பலவிதமான அழகுப் பொருட்கள் செய்து அசத்திட்டாரு.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
அதிலுள்ள ஒரு அழகைப் பற்றி பேசலாம்.
இதுக்கு பெரிய கணக்கு தெரிஞ்சிருக்க வேண்டியதில்லை. எளிய கணக்கு தெரிஞ்சாலே இந்த அழக ரசிக்கலாம்.
Square (வர்க்கம்) எண்கள் என்றால் என்ன?
ஒரு நம்பரை அதே நம்பரால் பெருக்கினால் அதுதான் Square (வர்க்கம்) எண்.
5 x 5 = 25 ; இது ஒரு Square எண்.
21 x 21 = 441 ; இது ஒரு Square எண்.
இந்த வரிசையில கோலப்புள்ளி (5 புள்ளி 5 வரிசை) வைத்தால் அது சதரமாக இருக்கும். அதனால அதுக்கு சதுர எண்கள் என்ற பெயர்.
சதுர(Square) எண் கொடுத்தாச்சு. அதோட மூல எண்ண எப்படி கண்டுபிடிக்கிறது.
1225 ஒரு Square Number அதோட Square root எப்படி கண்டுபிடிக்கிறது. அதாவது எந்த நம்பர அதாலேயே பெருக்கினா 1225 வருதுன்னு கண்டுபிடிக்கிறது.
சிம்பிள் 1225 நம்பர 5 x 5 x 7 x 7 அப்படின்னு பிரிக்கலாமா. இங்க பாருங்க ரெண்டு அஞ்சு, ரெண்டு ஏழு வந்திருக்கா. அந்த ரெண்டுல ஒண்ணு மட்டும் எடுத்துகிடனும்.
அதாவது 5 x 7 மட்டும் எடுத்துக்கனும். 5 x 7 என்னது ? 5 x 7 = 35 . அப்ப 1225 நம்பரோட Square root வந்து 35 ஆகும்.
இந்த 35 X 35 அப்படிங்கறத 35² எழுதலாம்.
Square root 1225 அப்படிங்கிறத √1225 எழுதலாம்.
ஒரு டிக் போட்டு, அந்த டிக்கோட மண்டையில இருந்து ஒரு கோடு இழுத்து அதுக்குள்ள ஒரு நம்பர எழுதினா.
அந்த நம்பரோட Square root கண்டுபிடின்னு அர்த்தம்.
இப்ப √10609 அப்படி கொடுத்தா அதோட விடை 103 ஆகும்.
103²=10609 ஆகும்.
இப்படி Square Numbers களுக்கும், Square root எண்களுக்கும் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுத்துகிட்டு, இதோ இந்தப் படத்துக்கு மூவ் ஆகுறேன்.
படத்தப் பாருங்க.
முதல்ல 3 நம்பர்தான் இருக்கு.
3 வந்து எதோட Square root ?
3 x 3 = 9
அப்ப 3 வந்து 9 தோட வர்க்கமூலம் என்ற Square root.
3 = √9 அப்படின்னு எழுதலாம்.
√9 = √1+8 எழுதலாமா? எழுதலாம்.
√9 = √1+2 x 4 எழுதலாமா ? எழுதலாம்.
ரூட் சிம்பல் மண்டைக்கோடு இதுல முழுக்க வரல, படத்துல உள்ள மாதிரி முழுக்க வர்றதா
நினைச்சிக்கனும்.
√9 = √1+2 x 4 சரியா.... சரி.
இப்ப இதுல 4 வருது பாருங்க. அந்த நால
4 = √16 எழுதலாமா.. .எழுதலாம்.
√16 = √1+15
√1+15 = √3 x 5
இப்ப 5 = √25
√25 = √1 + 24 = √1+ 4 x 6
6 = √36 = √1+35 = √1+ 5 x 7
இப்படி போகும்.
இன்னொருதடவ முதல்ல உள்ளத மட்டும் கவனிங்க.
3 ஒரே நம்பர் சரியா...
அத √9 எழுதுறோம்.
அந்த √9 த √1+8 ன்னு பிரிக்கிறோம்.
உள்ள ஒரு 8 இருக்கு பாருங்க.
அத 2 x 4 ன்னு போடுறோம்.
அந்த 4 இருக்கு பாருங்க.
அத √16 ன்னு எழுதுறோம்.
இந்த முதல் படிக்கட்ட மட்டும் திரும்ப திரும்ப ஒரு பேப்பர எடுத்து போட்டுப்பாருங்க.
இந்த கான்சப்ட நல்லா அனுபவிச்சி புரிஞ்சி வெச்சிக்கோங்க.

Image result for srinivasa ramanujan
இப்ப இன்னும் உள்ளப் போங்க.
இதுல இன்னொரு அழக கவனிங்க. 4 = √16 அப்படின்னு எழுதுற ஸ்டெப்ல ஒரு Square root உள்ள இன்னொரு Square root வருது பாருங்க.
அடுத்து இதே மாதிரி இன்னொரு சுற்று வரும் ஒரு Square root உள்ள ஒரு ஒரு Square root . அதுக்குள்ள இன்னொரு ஒரு Square root வருது பாருங்க.
இப்படி உள்ள உள்ள போய்கிட்டே இருக்கும்.
இதுக்கு முடிவே கிடையாது.
நம்ம எல்லாருக்கும் 3 அப்படிங்கிற எண் நல்லாத் தெரியும். அது ஒரு தெளிவான நிச்சயமான எண் அப்படின்னு.
ஆனா மாணிக்கத்துக்கு பாட்ஷான்னு இன்னொரு பெயர் இருக்கிறது மாதிரி,
இந்த 3 எண்ணுக்கு இப்படி ஒரு ”எல்லையில்லாத Square root உள்ள ஒரு ஒரு Square root” முகம் இருக்குன்னு தெரியாதுதான.
அது தெரியும் போது எவ்வளவு பரவசமா இருக்குது பாருங்க.
சும்மா இத ஒரு பேப்பர்ல எழுதி வெச்சி போட்டுப் பாருங்க.
You feel good.
பெரிய கணக்கு மேதையால்லாம் நீங்க இருக்க வேண்டாம்.
கணிதத்தோட அழக ரசிக்க அடிப்படை ஏழாங்கிளாஸ் கணக்கு தெரிந்திருந்தால் போதுமானது.
எனக்கு இந்த 3 நம்பர இப்படி பிரிக்கிறதப் பாத்தா பள்ளி நாட்கள் பேப்பர் கட்டிங்க நினைவுக்கு வரும்.
ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட சதுரமான அல்லது நீள் சதுரமான பேப்பரை ஒரு கத்திரிகோல் கொண்டு எப்பேர்ப்பட்ட சிக்கலான இதழ்களைக் கொண்ட பூவாக மாற்றி அழகு செய்கிறார்களோ அது மாதிரிதான் இந்த 3 என்ற தெளிவான எண்ணை வித்தியாசமா யோசிச்சி ஒரு ”வர்க்கமூல மலர்” Square root Flower ஆக மாற்றிவிடுகிறார்.
யார் இந்த 3 வர்க்கமூல மலரைக் கண்டுபிடித்தது தெரியுமா?
தமிழன் கணித மேதை ராமானுஜன்தான்.
உங்கள் வீட்டு பிள்ளைகள் 6,7 வகுப்பில் Square root படிப்பார்கள். அவர்களுக்கே இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
இது கணித சிலபஸில் இல்லாவிட்டால் கூட பத்து நிமிடம் எடுத்து இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
நிச்சயமாக அவர்களுடைய கற்பனைத்திறன் இதை புரிந்து முடிக்கும் போது பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
ஒரு சிறிய சீனிக்கட்டியை இழை இழையான சிக்கலான அழகான பஞ்சு மிட்டாயை ஆக்கும் வித்தை பற்றி புரிந்து கொள்ள எந்த மனித மனம்தான் விரும்பாது.
கணிதம் அழகு.
கணிதத்தை சரியாக அனுபவித்து படிக்கும் மனது வாய்த்துவிட்டால் வாழ்க்கையில் உங்களுக்கு மன அழுத்தம் என்பதே கிடையாது.
என்னை நம்புங்கள்.
எந்த கணிதம் வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.
ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தை அரைமணி நேரம் படித்துப் பாருங்கள்.
உங்கள் மன அழுத்தம் விடுபட்டு போயிருக்கும்.
No automatic alt text available.

உலகநாடுகளில் உண்மையான அளவுகள் - Vijay Bhaskarvijay

Atlas வரைப்படத்துக்காக
உலகநாடுகளில் உண்மையான அளவுகள் கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கும்...
அதாவது நீங்கள் அட்லஸில் பார்க்கும் அளவை விட உண்மையில் ஒவ்வொரு நாடும் சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும்...
உண்மையான அளவை பார்க்க இந்த லின்க் உதவுகிறது...
இந்த லின்கை சொடுக்குங்கள்...

https://thetruesize.com

உள்ளே சென்று (இடது பக்கம் மேலே) THE TRUE SIZE OF .... என்று காலியாக இருக்கும் இடத்தில் எந்த நாட்டின் உண்மையான அளவை பார்க்க விரும்புகிர்களோ அதை டைப் பண்ணவும்...
இப்போது அந்த நாடு இப்படி கலர் பார்டரோடு மேப்பில் தெரியும்..
அதை மவுஸின் இடது பக்கம் வைத்து அழுத்தி இழுத்து வேறு நாடுகள் மீது பொருத்திப் பார்க்கலாம்.
இடது பக்கம் கீழே இருக்கும் DIRECTION அம்பை சுற்றினால் நீங்கள் டைப் செய்த நாடு சுற்றும்...
அப்படி சுற்றிப் பார்க்கும் போது இன்னமும் நன்றாக புரிந்து கொள்ளலாம்..
உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம்
இந்த லின்கை லேப்டாப்பில் திறந்து கொடுத்துவிட்டு, செய்முறையை விளக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
அவர்களின் உலகம் பற்றிய புரிதல் நன்றாக வளரும்...
கண்டிப்பாக இந்த லின்கை காட்டுங்கள்...
செய்வீர்களா நட்புகளே

Yomeddine என்ற எகிப்து நாட்டு திரைப்படம் - Vijay Bhaskarvijay

Yomeddine என்ற எகிப்து நாட்டு
(மொழி அரபி) திரைப்படத்தில் பிஷே என்னும் மனிதர் வருகிறார்.
அவருக்கு வயது 50 (?) இருக்கலாம். சிறுவயதில் தொழுநோய் வந்து முகமெல்லாம் தழும்புகளுடன் இருக்கிறார்.
குப்பைக்கிடங்கில் குப்பை அள்ளி கொட்டுவது மட்டுமே அவர் வேலை.
பத்து வயதாக இருக்கும் போது
தொழுநோயால் பாதிக்கப்படும் போது
அவர் தந்தை அந்த குப்பை கிடங்கில் பையன் விட்டு “ பிஷே நீ உயிரோடு பிழைத்தால் பின்னால் வீட்டுக்கு வா” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வேகமாக போய்விடுகிறார்.
அதன் பிறகு பிஷேயின் தொழுநோய் சரியாகி முகமெல்லாம் தழும்பாகி உலக அழகு என்று நம்பும் தன்மைக்கு எதிர்காக ஆகி குப்பை கிடங்கிலேயே வாழ்க்கையை கழிக்கிறார்.
அங்கே அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்.
அந்த ஊரில் இருக்கும் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன் நட்பாகிறான்.
பிஷேயின் மனைவி இறந்து அவருக்கென்று யாருமில்லாத போது அவர் தந்தையைப் பார்க்க ஊர் பெயரை மட்டும் வைத்து தன் மட்டக்குதிரையில் பயணம் செய்கிறார்.
அவருடன் ஒபாமாவும் சேர்ந்து கொள்ள இருவரும் பிஷேயின் ஊருக்கு செல்கிறார்கள்.
எப்படியே பிஷேவின் அண்ணனைப் பார்த்து அப்பாவைவும் கண்டுவிடுகிறார் பிஷே...
அப்பாவுக்கு பக்கவாதம் வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பிஷே அப்பாவிடம்
”ஏன் என்னை அப்படி குப்பை கிடங்களில் விட்டு விட்டு வந்தீர்கள்” என்று கேட்கிறார்.
Image may contain: 2 people, people sitting, child and outdoor
அதற்கு அப்பா சொல்லும் பதில்தான் சிலிர்க்க வைத்தது.
“பிஷே... உன்னை அந்த நோயுடன்... அந்த முகத்துடன் எங்களோடு வாழ வைத்திருந்தால் நீ எங்கள் வாழ்க்கையைப் போல வாழ நினைத்து, அப்படி வாழ முடியாமல் ஒவ்வொரு விநாடியும் நரகத்தை அனுபவித்திருப்பாய்... ஆனால் இப்போது உனக்கான உலகத்தில் உனக்கு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், உனக்கு மனைவி கிடைத்தார், உனக்கு ஒபாமா கிடைத்தான், உனக்கான தொழிலும், உனக்கான கம்பீரமும், உனக்கான வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது பார்” என்கிறார் அந்த தந்தை.
அதை தந்தை சொல்லும் போது பிஷேவுக்கு அவர் வாழ்க்கையில் கிடைத்ததை எல்லாம் எடிட்டில் காட்டுகிறார்கள். பார்க்கும் போது
புல்லரித்து விட்டது.
தொழுநோய் வந்தவர்களை எல்லாம் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதை இதன் அர்த்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் அந்த அப்பாவின் மனதில் இருக்கும் அவர் சொல்லும் கருத்தையும் ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
இது பற்றி மார்க்ஸியவாதியான தோழர்
Selvaraj Ksraj பேசிக் கொண்டிருந்தேன்.
அக்காட்சியும் வசனமும் என் சிந்தனையை தூண்டிக் கொண்டே இருப்பதாக சொன்னேன்.
அவர் சொன்னார்
“பிரச்சனையை வெளிய இருந்து பாக்குறதுக்கும் உள்ளேயே வாழ்றதுக்கும் வித்தியாசம் இருக்கு விஜய். பிரச்சனையாவே இருக்கிறவன் வாழ்க்கையை யதார்த்தமா பார்ப்பான்.
அத இந்த உலகத்துல தடுக்கவே முடியாது.
இப்போ மேனகா காந்தி ஒரு சமயம் நாய்களுக்கு எல்லாம் கருத்தடை செய்ற திட்டம் கொண்டு வந்தாங்க.
அப்ப என்னோட வேலை பார்த்த ஒருத்தர், அவர் தினமும் வீட்டுக்கு நைட் 12 மணிக்கு மேலதான் போகனும்.. .
அவர் அந்த திட்டத்த திட்றாரு
“ நைட்டு ஒருநாள் வந்து இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வர்றவங்க தெருல நடக்கனும். நடந்தாத்தான் நாய்க்கடின்னா எப்படி இருக்கும், நாய் சுத்தி நின்னு மேல நின்னு நம்மள பிறாண்டுனா எப்படி இருக்கும், எப்படி பயமா இருக்கும்னு தெரியும். கார்ல விர்விருன்னு போயிட்டு, பாதுகாப்பா தெருவ கடந்துட்டு, நாய் மேல இரக்கப்பட்டா கடி வாங்கி சாவுறது யாரு” அப்படி சொன்னாரு...
இதுதான் பிரச்சனைல உள்ளவன் பிரச்சனைய அனுகுறதுக்கும்,
பிரச்சனைல இல்லாதவன் அணுகுறதுக்கும் உள்ள வித்தியாசம்.
இந்த யதார்த்தப் புரிஞ்சிக்காம எந்த பிரச்சனையும் நாம அணுகவே முடியாது. கூடாது” என்று முடித்தார்.
ஆம் இந்த பாயிண்டில் யோசிக்க நிறைய இருக்கிறதுதான்...

Friday, December 21, 2018

Franca Viola ஒரு பாலியல் வழக்கு - விஜய் பாஸ்கர்விஜய்

80 கள், 90 கள் தமிழ் சினிமாக்களில்
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் அப்பாவோ அம்மாவோ பாலியல் வல்லுறவு செய்த ஆணிடம்
“என் பொண்ண தயவு செய்து கல்யாணம் செய்துக்க. அப்பதான் அவ தல நிமிந்து வாழ முடியும். எங்க குடும்பமும் தல நிமிந்து நிக்கும்” என்று கெஞ்சுவதை பார்த்திருக்கிறோம்.
The Magdalene Sisters திரைப்படத்தில் அயர்லாந்து நாட்டில் 1960 களில் பாலியல் வல்லுறவு கொடுமையை அனுபவித்த பெண்களை பெற்றோர்கள் ”கடும் வேலை செய்யும் முகாமுக்கு” அனுப்புவதை பார்க்கலாம்.
நீங்கள் கெட்டுவிட்டீர்கள். கடுமையான வேலை செய்வதின் மூலமாக மட்டுமே உங்களை புனித படுத்திக் கொள்ள முடியும் என்று கொடுமையை அனுபவித்த பெண்களையே மேலும் கொடுமைப்படுத்தினார்கள்.
மொத்த ஐரோப்பாவுமே இந்த விக்டோரியன் ஒழுக்கமுறையில் பெண்களை கொடுமைதான் படுத்தி இருக்கிறார்கள்.
Franca Viola என்னும் இத்தாலி நாட்டு பெண்ணுக்கு 1963 வருடம் அவள் மாமா பையனோடு திருமணம் நிச்சயம் ஆகிறது.
அப்போது அவள் வயது 15 தான்.
பிறகு அவன் நல்லவனில்லை என்று தெரிந்ததும் அவள் அப்பா நிச்சயதார்த்தை செல்லாது என்று அறிவிக்கிறார்.
அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து Melodia என்னும் பெயரைக் கொண்ட அவன் Franca Viola வை கடத்துகிறான்.
கடத்தி அவன் அக்கா வீட்டில் எட்டு நாட்கள் சிறை வைத்து தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு கொடுமையை செய்கிறான்.
Franca Viola வை மீட்ட பிறகு “நானே இவளை திருமணம் செய்து கொள்கிறேன்” என்கிறான்.
அதுவரையில் இத்தாலியில் ஒருவன் வல்லுறவு செய்து விட்டால் அப்பெண் அவனையே கேள்வி கேட்காமல் திருமணம் செய்து கொள்வாள்.
அதுதான் அவள் பெருமையை மீட்கும் செயலாக இருந்தது. கோர்ட்டும் அதை அனுமதித்தது.
அதுதான் அங்கே உள்ள சமூக வழக்கமாக இருந்தது. ஆனால் Franca Viola அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“அவன் மேல் எனக்கு காதல் இல்லை. பிறகு எப்படி திருமணம் செய்ய முடியும். எட்டு நாட்கள் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு ஆளான கொடுமைக்கு என்ன பதில் அவன் சொல்லுவான்” என்று கோர்ட்டில் அவனை திருமணம் செய்ய மறுக்கிறாள்.
வழக்கிட்டு கொடும் பாலியல் வல்லுறவு செய்தமைக்காக அவனுக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள்.
அப்போதை ஐரோப்பிய அமெரிக்க சூழலில் இது பெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது.
Image may contain: 2 people, close-up

இவ்வளவு கொடுமையை Franca Viola அனுபவித்த பிறகும் ஊடகங்கள் அவளை “இவள் ஒல்லியாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், கவர்ச்சியாக இருக்கிறாள்” என்று பிரச்சனையின் திவீரத்தை குறைக்கும் விதமாகத்தான் எழுதியதாம்.
தன் மாமா பையன் சிறைக்கு போனதும் Franca Viola திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கிறாள்.
பிறகு மூன்று வருடங்கள் போன பிறகு Giuseppe Ruisi என்ற தன் நண்பனை அன்புடன் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார்.
தன்னை ஒரு Object ஆக சமூகம் கருதுவதை எதிர்த்து போராடும் போது Franca Viola பல துன்பங்களை அடைந்திருக்கலாம்.
ஆனால் நினைத்துப் பாருங்கள்
எட்டு நாட்கள் பூட்டி வைத்து ஒரு குடும்பமத்தின் ஆதரவுடன் ஆண்குறியை எடுத்து வலுக்கட்டாயம நுழைக்கும் போது அவள் அடைந்திருக்கும் அவமானம் ஆத்திரம் இயலாமையின் தவிப்பு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.
உடல் என்பதை புனிதமாக கருதி அதை சுத்தமாகத்தான்(?) கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிற்போக்கு எண்ணத்தில் இருந்து Franca Viola மீண்டதுதான் இங்கே மிகப் பெரிய விஷயம்.
வழக்கத்தை உடைப்பது வலிதான்...
ஆனால் Franca Viola அதை சாதித்திருக்கிறார்...

Thursday, December 20, 2018

உலக இட்லி தினம் மார்ச் 30

இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான உணவு இட்லி. குறிப்பாக தென்னிந்தியாவில் தினந்தோறும் காலை உணவுகளிலில் இட்லி கண்டிப்பாக இருக்கும். அதனை நினைவுகூறும் வகையில் உலக இட்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் சத்தான உணவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவாகும் இட்லி திகழ்கிறது.
இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவரும் இப்போது இட்லிதான் சிறந்த சத்தான உணவு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா முக்கிய விஷயங்களுக்கும் உலக தினம் இருப்பது போல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏன் அந்த நாளில் கொண்டாடப்படுகிறது? என்ன காரணம், யாரால் உலக இட்லி தினம் வந்தது? தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை பாருங்கள்.


Wednesday, December 19, 2018

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை - மீரா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

வாவா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை ...
Movie Meera Music Ilaiyaraaja
Year 1992 Lyrics
Singers Asha Bhosle, S. P. Balasubramaniam

Tuesday, December 18, 2018

The Little Match-Seller - விஜயபாஸ்கர் விஜய்

புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன்...
ஒரு புத்தகத்தை எடுத்து இக்கதையை படித்தேன்.
படித்த முடித்த உடன் நிலைகுலைந்தேன்.
வீட்டுக்கு வந்த உடன் அதை எழுத வேண்டும் போல ஒரு தவிப்பு.
இக்கதையில் வரும் சிறுமி எப்படி இருப்பாள். எந்த கோணத்தில் எந்த இடத்தில் நின்றிருப்பாள். அவளைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தையும் என்னால் உணர முடிந்தது.
உடனே எழுதினேன். எழுதும் போது கலக்கமாக உணர்ந்தேன்.
வருடத்தின் கடைசிநாள் அது.
பனிபொழியும் குளிரில் அச்சிறுமி நடுங்கிக் கொண்டிருந்தாள்.
மெலிந்த உடலையும், திராணியில்லாத குரலையும், வயிற்றைச் சுருட்டும் பசியையும் கொண்டிருந்தாள்.
அலைந்து திரியும் கால்களில் அவள் அம்மாவின் பழைய ஷூக்களை அணிந்திருந்தாள்.அது அவளுக்கு பொருந்தவில்லை.
பாதங்களை மட்டுவாவது பனியிலிருந்து காக்கும் அளவில் அது அவளுக்கு உதவியது எனலாம்.
கையில் ஒரு பை.
அந்த பழைய பையில் தீப்பட்டிகள். தீப்பட்டி ஒன்று கூட விற்கவில்லை. யாரும் வாங்கவில்லை.
தீப்பட்டிகளை விற்காமல் வீட்டுக்கு போக முடியாது. அப்பா கொடுமையாக அடித்து வைப்பார். சில நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி உதைப்பார்.
அப்படியெல்லாம் செய்தால் அது வேதனையை கொடுக்கும் என்று அவருக்கு தெரிவதில்லை.
ஏழ்மை கொடுக்கும் வேத்னையை தாங்க விருப்பமில்லாமல், அப்படியே அவளிடம் திருப்பிவிடும் அப்பாவின் மனதை, அன்பு ஒருமுறை கூட வருடாதது பற்றி யோசிக்கும் அறிவை பெற்றிராத அப்பாவி சிறுமி அவள்.
அப்பாவின் அடி பற்றி யோசித்து ஒரு சரிவான தெருவில் இறங்கி நடக்கும் போது பனியால் வழுக்கினாள்.
உருண்டு விழும் போது காலுக்கு பொருந்தாத அவளது ஷூக்கள் பிரிந்து விழுந்தன.
ஒரு ஷூவை தட்டுத் தடுமாறி எடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு ஷீவை அவ்வழி வந்த சிறுவன் ஒருவன் திருடிக்கொண்டு ஒடிவிட்டான்.
முப்பது விநாடிகளில் ஒற்றை ஷுவுடன் அவள் தனித்து விடப்பட்டாள்.
அடுத்த முப்பது விநாடிகளில் வெறுங்காலில் பனிக்குளிர் ஏற ஆரம்பித்தது.
”ஆஹ் குளிருது” என்று ஒரு காலை இன்னொரு கால் மீது வைத்துக் கொண்டாள்.
ஒற்றைக் காலால் அதிக நேரம் நிற்கமுடியவில்லை.
தடுமாறி கிழே விழுந்தாள்.விரல் இடுக்குகளில் பனி ஈவுஇரக்கமே இல்லாமல் குளிரை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
ஷூ இல்லாத கால் வெளுக்க ஆரம்பித்தது.
ரத்தம் குறைய ஆரம்பித்தது. ஒரு தீப்பட்டி கூட விற்கவில்லை.
ஒரு வீட்டின் சுவர் அருகே அமர்ந்து கொண்டாள். இங்கே அடிக்கும் குளிருக்கும் அவள் வீட்டின் குளிருக்கும் வித்தியாசமில்லை.
பிய்ந்து போன கூரையை உடைய பனிக்கதிர்கள் நுழையும் வீடும் இந்த தெருவும் ஒன்றுதான் அவளுக்கு. வீட்டில் அடிகிடைக்கும்.. இது தெருவில் அப்பாவின் அடிகிடைக்காது.
அதனாலேயே தெருவில் அமர்ந்திருந்தாள். கால் மரத்துப் போனது. இருட்ட ஆரம்பித்தது. பல வீடுகளில் இருந்து வெண்ணெய் உருகும் உணவின் வாசம் அடித்தது. சூடாக உண்ட பிறகு, வைனை ஊற்றி வீட்டுக்குள் சுகமாக குடித்துக் கொண்டிருப்பார்கள்.
சிறுமிக்கு கண் இருட்டிக்கொண்டுவந்தது. இந்த பையில் இருக்கும் தீப்பெட்டிகளில் ஒரு பெட்டியை எடுத்து தீப் பற்ற வைத்தால் என்ன?
அது குளிருக்கு இதமாய் இருக்குமே என்று தோன்றியது.
தயக்கமாக ஒரு தீகுச்சியை எடுத்து கிழித்தாள்.
தீக்குச்சி தீயாகி ஜொலிக்கும் போது அந்த சாப்பாட்டு மேஜை தெரிந்தது.
அதில் பொரித்த கோழி இறைச்சியும், சுவையான கேக்கும், பழரசமும் இருந்தன. குளிரைப் போக்க அடுப்பொன்றும் மேஜை அருகே இருந்தது. தீக்குச்சி வெளிச்சம் குறையும் போது ஒவ்வொன்றாய் மங்கியது.
அணையும் போது முற்றாக கோழி இறைச்சியும், கேக்கும், பழரசமும் காணாமல் போயின.
சிறுமி யோசித்தாள்.
அடுத்த குச்சியை உரசினாள்.
தீக்குச்சியின் ஒளியில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் தெரிந்தது. அதன் கரும்பச்சை இலைகள். கரும்பச்சை இலைகளைத் தொடர்ந்த இளம்பச்சை இலைகள்.
அதை அலங்காரப்படுத்தும் மணிகள். தீக்குச்சி அணையும் போது கிறிஸ்துமஸ் மரம் காணாமல் போனது.
அடுத்த குச்சியை எரிக்கும் போது அழகான நட்சத்திரம் மின்னியது. மின்னிய நட்சத்திரம் குச்சி அணையும் போது தரையில் விழுந்து அணைந்தது.
சிறுமிக்கு பாட்டி நினைவு வந்தது.
எவ்வளவு அன்பாயிருப்பாள் பாட்டி. இன்னொரு குச்சியைப் பொருத்தினாள். அங்கே அவள்பாட்டி சிரித்தபடியே தோன்றினாள்.
“பாட்டி என்ன இங்க வந்திருக்கீங்க”
பாட்டி சிறுமியை நோக்கி அன்பாக கையை நீட்டினாள்.
“பாட்டி தீ எரியுறது நின்னாச்சுன்னா நிங்க போயிருவீங்க பாட்டி. அதுக்கு முன்னாடி என்ன கூட்டிட்டு போயிருங்க பாட்டி”
ஒரு குச்சி அணைமுன்னே இன்னொரு குச்சியை ஏற்றினாள்.
பாட்டி போகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
“பாட்டி நீ நிச்சயமா போகாத பாட்டி அப்பா என்ன ரொம்ப அடிக்கிறார். இதோ குளிர்ல நிக்குறேன். என்கிட்ட போட்டுகிறது ஷு கூட இல்ல. என் காலெல்லாம் மரத்து போச்சு போட்டி. ஐயோ தீக்குச்சி தீரப்போகுதே. தயவுசெய்து என்னவிட்டு போயிராத பாட்டி பயமா இருக்கு எனக்கு”
இன்னும் ஒரு குச்சியை பொருத்தினாள். பாட்டி சிரித்துக் கொண்டே நின்றாள்.
“ஒரு தீப்பெட்டி கூட விக்கல பாட்டி. வீட்டுக்குப் போனா அப்பா அடிப்பார். பயமா இருக்கு. என்னையும் உன்னோட கூட்டிட்டுப் போயிரேன். நா உன் கூடவே வந்த்ர்றேன் பாட்டி.போயிராதீங்க இன்னொரு குச்சியை பொருத்திக்கிறேன்”
தீக்குச்சியை பொருத்திவிட்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டே இருந்தாள் அச்சிறுமி.
பாட்டி, பாசத்தோடு கையை நீட்டி வருமாறு அழைத்தாள்.
சிறுமி மகிச்சியோடு பாட்டியின் கைகளைப் பிடித்துப் போகும் போது குச்சி அணைந்தது.
எங்கும் இருட்டு.
கொடுமையான இருட்டு. பனியோடு கலந்த கொடுமையாக இருள்.
காலை விடிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில்; திளைத்த மக்களுக்கு அந்தக்காட்சி வித்தியாசமானதாகப் பட்டது.
ஒரு சிறுமி கிழித்த தீக்குச்சிகளின் நடுவே குளிரில் நடுங்கி செத்துக் கிடக்கிறாள்.
முகம் வெளிறி பனிசரல்களுக்குள்.
ஒரு பெண்
“பாவம் ராத்திரியெல்லாம் குளிர்ல கிடந்து விரைச்சிட்டா ” என்று மற்றவர்கள் சொல்லும் போது குளிர் அடித்துக் கொண்டிருந்தது.
The Little Match-Seller என்றொரு Hans Christian Andersen FairyTales யில் இருந்து ....

Image may contain: outdoor

Monday, December 17, 2018

கொஞ்சம் யோசியுங்கள் - விஜயபாஸ்கர் விஜய்

 


ஒருமுறை அப்பாவிடம் தாழ்த்தபட்டவர்கள் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதில் இருந்தே அப்பாவிடம் பேசுவது என்பது எனக்கு பிடித்த பொழுது போக்கு. உலகில் எதைவிடவும் அதிகமாக அதை விரும்புவேன்.
சிறுவயதில் அப்பா கடை அடைத்துவிட்டு இரவு வந்து அருகில் படுப்பார்.நான் அதற்குள் ஒரு தூக்கம் போட்டு முடித்திருப்பேன்.
அதன் பிறகு அப்பா மகாபாரதம் கதை பேசுவார். நானும் அது பற்றி மிக அர்வத்துடன் பேசுவேன். ஒவ்வொரு கேரக்டரையும் பற்றியும் விவாதம் செய்வோம். சில சமயம் இதெல்லாம் முடிய இரவு இரண்டு மணியாகும்.
காலை எழுந்திருக்கும் போது அப்பா கடைதிறக்க போயிருப்பார். எது படித்தாலும் அது பற்றி அப்பாவிடம் விவாதிப்பேன்.
அப்படியாக பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா கொஞ்சம் சலிப்புடம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் ஏன் என்று காரணம் கேட்டேன். அப்பா ஒரு சம்பவம் சொன்னார்.
கடைத்தெருவில் ஒரு நகைக்கடைக்காரர் ஒரு தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை கொடுத்தாராம்.
கொஞ்ச நாளில் கும்பலாக வந்த அவள் உறவினர்கள் “நீ எங்க பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்ட” என்று மிரட்டி நல்ல தொகை ஒன்றை வாங்கி போய்விட்டார்களாம்.இதைச் சொல்லி “இது மாதிரிதான் சட்டத்த யூஸ் பண்றாங்க” என்று சலித்துக் கொண்டார்.
“யப்பா நான் அம்பேத்கர் மனச பாதிச்ச ஆறு சம்பவத்த சொல்றேன் நீங்க கொஞ்சம் கேளுங்க” என்று வீட்டு மொட்டைமாடியில் ஒரு பிரசங்கியைப் போல தொண்டையை கனைத்துவிட்டு பேசத் தொடங்கினேன்.
நிற்க
இங்கே முகநூலில் எத்தனையோ குடும்பத்தலைவிகள் இருக்கிறீர்கள். வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு ஸ்டிரஸ்களின் போது அதை கொஞ்சம் தீர்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபேஸ்புக் வருவீர்களாயிருக்கும்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் அன்பே உருவாய் இருப்பீர்கள். ஒருவருடைய பசியை தாங்க மாட்டீர்கள். ஒருவருடைய உடல்நிலை சரியின்மையை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் சமுதாய அடிப்படையில் பல கொடூரமான பதிவுகளில் உங்கள் லைக்குகள் இருக்கும்.
பலநேரம் இதைப் பார்த்து ஆச்சர்யபட்டிருக்கிறேன். ஏன் இவ்வளவு இரக்கமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று. ஆனால் தனித்தனியே பார்த்தால் ஒவ்வொருவரும் மிக நல்லவர்கள்.
இதோ என் அப்பாவுக்கு சொன்ன விசயத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இது ஒரு சாரார் மீது வெறுப்பை வளர்க்கும் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது. ஆனால் ஒரு சாரார் மீது உண்மையான அன்பு வரும்.இப்படியெல்லாம் உங்கள் தாத்தா கஷ்டப்பட்டிருந்தால் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பீர்கள்.
இதே அளவு துன்பத்தை இப்போதும் பலர் அனுபவிக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா.
சம்பவம் 1:
1901 வருடம் அம்பேத்கரும் அவருடைய சகோதரர்களும் அவர் அப்பாவைப் பார்க்க கோரேகன் செல்கிறார்கள்.அம்பேத்கரின் அப்பாவுக்கு சரியான தகவல் கிடைக்காத குழப்பத்தால்,அம்பேத்கர் குதிரைவண்டியில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்யவேண்டிய நிலமை ஏற்படுகிறது.
ஒரிரவு, தெரியாத ஊரின் ரோட்டோரம் தங்க வேண்டிய நிலமை. இந்தப் பயணத்தில் சிறுவன் அம்பேத்கருக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்படுகிறது.அவனுக்கு சாப்பிட, வேண்டிய மட்டும் உணவை அவன் அம்மா கட்டிக்கொடுத்திருக்கிறார்.
ஆனால் வழியில் அவருக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.
தாழ்த்தபட்டவன் என்ற காரணத்தால் தண்ணீரே கிடைக்கவில்லை.
தண்ணீரில்லாமல் உணவு உண்ணுதல் முடியாத காரியம்.அதனால் கடைசிவரை அவற்றையெல்லாம் சாப்பிடாமலேயே அப்பாவைச் சென்றடைகிறார் அம்பேத்கர்.
ஜாதி வெறியின் கொடுமையின் வீரியத்தை அவர் புரிந்து கொண்டது இதிலிருந்துதான்.

சம்பவம் 2:
1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் அம்பேத்கருக்கு பரோடா மன்னருக்காக உழைக்க வேண்டிய வேலை. அவருக்கு வேலை கிடைக்கிறது.
ஆனால் தங்குமிடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பார்சி ஹாஸ்டலுக்கு செல்கிறார்.அங்கே அவரை பார்சி என்று நினைத்து தங்க இடம் கொடுக்கிறார்கள். அம்பேத்கரும் அதை மெயிண்டயின் செய்து வருகிறார்.
ஒரிரவு அம்பேத்கரின் ஜாதியை அறிந்து பார்சிக்கள் கூட்டம் கம்பு தடி எல்லாம் எடுத்து வந்து அவரை சுற்றிக்கொண்டு “எப்படி எங்கள் இன ஹாஸ்டலில் நீ தங்கியிருக்கலாம்” என்று அவரைச் சுற்றி அடிக்க நிற்கிறது. அம்பேத்கர் அவர்கள் அவேசத்தைப் பார்த்து பயந்து மன்னிப்புக் கேட்டு மனக்கஷ்டத்துடன் அந்த இடத்தைக் காலி செய்கிறார்.
இந்துக்களுக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்டவர்கள் பார்சிக்களுக்கும் பிடிப்பதில்லை என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.

Image may contain: 1 person

சம்பவம் 3 :
1929 இல் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனையொன்றைப் பற்றி விசாரனை செய்ய மும்பை அருகே ஒரு கிராமத்துக்குச் செல்கிறார் அம்பேத்கர். ரயில் நிலைத்திலிருந்து நான்கு மணி நேர டோக்லா வண்டிப் பிரயாணம். வண்டியை ஒட்டி வந்த வண்டிக்காரன் சரியாகவே ஒட்டவில்லை. பக்க மறைப்பு இல்லாத மரப்பாலங்களை அவன் கடக்கும் போது பல அசம்பாவிதங்கள் நடக்க இருந்தன.
அவனுக்கு வண்டி ஒட்டத்தெரியவில்லை என்பதை அம்பேத்கர் கண்டுபிடித்துவிட்டார். அன்றைய நாள் கடைசியில் அது பற்றி விசாரித்திருக்கிறார். டோக்லா வண்டிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்டி ஒட்ட வரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கி, அவர்களில் அரைகுறையாக தெரிந்த ஒருவனை வண்டியோட்டியாக்கி ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை பார்சிக்களுக்கு மட்டுமல்ல டோக்லா வண்டிக்காரர்களுக்குக் கூட பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 4
1934 யில் ஹைதிராபாத்தில் இருக்கும் தவலாபாத் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அம்பேத்கரும் அவர் இயக்க அங்கத்தினர்களும் போயிருக்கின்றனர்.அந்தக் கோட்டை முஸ்லிம்களால் பராமரிக்கப்படும் கோட்டை.
கோட்டையில் நுழைந்ததும் அம்பேத்கருடன் வந்தவர்கள் அங்கிருந்த குளத்தில் கால் கை கழுவியிருக்கிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் “ நீங்கள் தெத்கள் ( தாழ்த்தபட்டவர்கள்) எப்படி எங்கள் குளத்தைத் தொடலாம். அது தீட்டாகிவிட்டது” என்று அடிக்க வருகிறார்கள்.
உடனே அம்பேத்கர் “ இப்படித்தான் உங்கள் மதம் உங்களுக்கு சொல்கிறதா? இந்தக் கோட்டையை நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கு அனுமதியுண்டா? கிடையாதா ? பளிச்சென்று சொல்லுங்கள் “ என்று உரத்து சொல்கிறார்.
முஸ்லிம்கள் நெடுநேரம் யோசிக்கிறார்கள். போனால் போகிறதென்று அனுமதி கொடுக்கிறார்கள்.
ஆனால் குளத்தைத் தொடக்கூடாதென்று கூடவே ஒரு காவலாளியையும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை, பார்சிக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 5:
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல.ஒரு பங்கி ஜாதியைச் சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்தது என்று அம்பேத்கர் சொல்கிறார். அவனுக்கு அரசு அலுவலராக வேலை கிடைக்கிறது.
ஆனால் அவன் அலுவலகத்தில் அவனுக்கு இருக்கை கொடுக்கவில்லை.அவனுக்கு குடிநீர் வேண்டுமானால் மொண்டு குடிக்க முடியாது.வேறு யாராவது நீரை அவன் கைகளில் ஊற்ற வேண்டும்.
ஒருநாள் அவன் தெரியாமல் உயர் ஜாதிகார அதிகாரி இருக்கையில் அமர்ந்துவிட, அவர் ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வந்து அவனை அவமானப்படுத்தி அடிக்க வருகிறார்.அவன் அந்த வேலையே வேண்டாம் என்று விட்டு ஒடிப்போகிறான்.
சம்பவம் 6 :
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல. ஒரு தாழ்த்தப்பட்டவர் காந்தியின் ”யங் இந்தியா” இதழுக்கு எழுதிய கடிதம்.
அவருடைய குழந்தைக்கு உடல் சரியில்லை.
கடுஞ்ஜுரம்.
மருத்தவர் ஜாதியைக் காட்டி வரமறுக்கிறார்.இவர் பணம் கொடுக்கிறேன் என்கிறார்.அப்போதும் மருத்தவர் வரமறுக்கிறார்.
பல சிபாரிசுகளுக்குப் பிறகு இரண்டு நாள் கழித்து மருத்துவர் வருகிறார்.
குழந்தையை ஹரிஜனக்குடியிருப்பின் வெளியே எடுத்து ஒரு வீட்டில் வைக்கிறார்கள்.
தெர்மாமீட்டரை டாக்டர் ஒரு முஸ்லிமிடம் கொடுக்கிறார், முஸ்லிமிடமிருந்து இவருக்கு அது வருகிறது, பின் அதை மனைவிடம் கொடுத்து குழந்தைக்கு வைத்து காய்ச்சலை அளவெடுக்கிறார்கள்.
டாக்டர் மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டு போய்விடுகிறார். ஆனால் குழந்தை ஒருநாளில் இறந்துவிடுகிறது.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை
பார்சிகளுக்கும்,
டோக்லா வண்டிக்காரனுக்கும்,
முஸ்லிம்களுக்கும்
அரசு அலுவலர்களுக்கும்
மருத்துவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை.
இதை அப்பாவிடம் சொல்லி முடிக்கும் போது உணர்ச்சிமயமாய் இருந்தேன்.
அப்பாவிடம் சொன்னேன்
“யப்பா உங்களுக்கு எழுபது வயசாச்சு. நீங்கள் இந்த விஷயத்தில் முட்டாளாகவே இருந்து விட்டீர்கள். பரவாயில்லை.இந்த புள்ளியில் விழித்துக் கொள்ளுங்கள். ஒரு சாராரின் வலியை புரிந்து கொள்ளுங்கள். பொத்தாம் பொதுவாய் பேசாதீர்கள்.” என்றேன்.
அப்பா புன்சிரிப்போடு என்னை ஏற்றுக் கொண்டார். சமுதாய உணர்வில் கருணை இருப்பதும் ஒரு மனிதன் முழுமையடைய முக்கியம்.
அந்த சமுதாய உணர்வில்லாமல் என்னதான் தனிபட்ட மனித அளவில் கருணையாய் இருந்தாலும் அது வீண்தான்.
கொஞ்சம் யோசியுங்கள் ...

Sunday, December 16, 2018

கிறிஸ்மஸ் தாத்தா யார்? சூர்யா சேவியர்

கிறிஸ்தவ வேதநூல்கள் எதிலுமே இல்லாத ஒன்று கிறிஸ்மஸ் தாத்தா. யார் இவர்?எப்படி உலகம் முழுமையும் அறியப்படுகிறார்?இதன் பின்னணி என்ன?
இதிலும் யூத மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் ஒளிந்துள்ளது.
கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கியின் சிமிர்னாவில் பேராயராக இருந்தவர் நிக்கோலஸ்.இவர் மிகப் பெரிய செல்வந்தர்.ஏழைகளுக்கு உதவுபவர். குழந்தைகளிடம் இனிமையாகப் பழகுபவர்.இவரின் எளிய நடவடிக்கை பலரையும் இவர்பால் ஈர்க்கச் செய்தது. கத்தோலிக்கம் இவரை புனிதராக திருநிலைப்படுத்தியது.
இவரை மையமாக வைத்து 1822 ல் டாக்டர் கிளமெண்ட் மூர் எனும் கவிஞர் ஒரு கவிதை எழுதுகிறார்.இந்தக் கவிதையின் நாயகன் நிக்கோலஸ் தான். ஆனால் அந்த கவிதையில் நிக்கோலஸை சாண்டா கிளாஸ் எனும் புனைவுப் பெயரில் அழைக்கிறார். ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என்பதே கவிதையின் துவக்கம்.
இந்தக் கவிதையில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு அமெரிக்க ஓவியர் வரைந்த உருவமே அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி ஒன்றை ஒன்பது கலைமான்கள் இழுத்துச் செல்வதும், அதில் கம்பீரமாக சாண்டா கிளாஸ் எனும் நத்தார் தாத்தா செல்வதையும் காண முடிந்தது.
அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரைகள் மீதும் பறந்து செல்லும். செல்லும் போது புகை கூண்டின் வழியே தாத்தா குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
அழகிய சிவந்த கன்னங்கள்,பழுப்பு நிறத்தாடி,சிறிய வாய்,பெருத்த தொப்பை, சிவப்பு நிற மேலாடை,பனிக்காலத் தொப்பி,தோளில் ஒரு மூட்டை ஆகியவை இணைந்த உருவமே சாண்டா கிளாஸ்.இந்த உருவம் தனது வீட்டு தோட்டக்காரரின் உருவத்தை வைத்து கவிதை எழுதியாக கிளமெண்ட் மூர் சொன்னாலும் அதன் பின்னணி வேறு.
தோர் எனும் ஜெர்மானியக் கடவுளை கொம்புகளுள்ள இரண்டு மான்கள் இழுத்துச் செல்வதைப் போல புனையபபட்ட புராணக்கதையின் வடிவமே இது.இந்தக் கடவுளுக்கு யூல்
என்ற பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படுவதும் கவனத்திற்குரியது.
மான் கொம்புகளை வீட்டுச் சுவற்றில் மாட்டி வைக்கும் வழக்கம் தோர் கடவுளின் நினைவாகவே.மேலும் நிலவை நோக்கி மான்கள் பறந்து செல்வது பாபிலோனியர்கள் வணங்கிய நிம்ரோத் எனும் தெய்வமே.நிம்ரோத் என்பது சூரியக் கடவுளே. அந்த சூரியக் கடவுளின் பண்டிகை டிசம்பர் 25.
இங்கு தான் யூத மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறது. கிபி 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியார் நிக்கோலஸை 1800 களில் கவிதையாக எழுதவும்,அதன் மூலம் கிறிஸ்மஸ் தாத்தா உருவாகவும் எது காரணம்?

Related image

1750-1850 என்ற இந்த நூறு ஆண்டுகளே ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் தொழிற் புரட்சி நடந்த காலம். தொழிற்புரட்சி புதிய உற்பத்தி கருவிகளை கண்டறிந்தது. தொழிற் புரட்சியின் துவக்கம் பஞ்சாலைகள் சார்ந்ததே. துணிகளும் அதைச் சார்ந்த விழாக்களும், விழாக்களையொட்டிய பரிசுப் பொருட்களும் அன்றைய சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டன. அதன் விழா வடிவமே கிறிஸ்மஸ் தாத்தா உருவாக்கமும் அவர் பரிசு தருவார் என்ற கதையும்.
இன்று உலகில் 210 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். மேற்குலக முதலாளிகளுக்கு கிறிஸ்துவை விட கிறிஸ்மஸ் தாத்தாவே தேவை.ஏனெனில் அவரே உற்பத்தியான பொருளை சந்தைப்படுத்துகிறார்.
இதில் இன்னொரு அரசியல் முக்கியமானது.யூதத்திலிருந்து உருவான கிறிஸ்தவத்தை யூதத்திலேயே நிலை நிறுத்தும் வேலையும் உண்டு.யூதத்தின் சூரியக் கடவுளின் பண்டிகை நாளான டிச 25 ஐ யே கிறிஸ்து பிறப்பாக கொண்டாட வைத்தனர்.இதற்கு பயன்படுத்தப்பட்ட நிக்கோலஸ்,கவிதை எழுதிய டாக்டர் கிளமெண்ட் மூர் ஆகியோர் யூதர்களே.

Saturday, December 15, 2018

The Two Gentlemen of Verona - Vijay Bhaskarvijay

’The Two Gentlemen of Verona’ என்ற நாடகத்தில்
( ஷேக்ஸ்பியர் எழுதியது )
வாய் தவறிய காரணத்தால் பெரிய பிரச்சனை வருவதைப் பார்க்கலாம்.
புரோட்டிஸும் வேலண்டியனும் நண்பர்கள்.
புரோடியஸ் ஜூலியா என்ற அழகிய பெண்ணை லவ்வடிக்கிறான். வேலண்டியனுக்கு லவ் அடிக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.
வாழ்க்கையில் முன்னேறப் போகிறேன் என்று மிலன் நகரத்து பிரபுவிடம் உதவியாளராய் சேர்கிறான். அங்கே பிரபுவின் மகளான சில்வியா வேலண்டியனை லவ்வடிக்கிறாள். வேலண்டியனும் பதிலுக்கு லவ்வடிக்கிறான்.
இங்கே புரோட்டியஸின் அப்பா அவனை ஒரே திட்டு.
“உன்ன போல பிள்ளதான வேலண்டியனும். அவன் ஒழுங்காயிட்டு பொழைச்சு முன்னேறுலான்லால. நீ மட்டும் இங்கன கிடந்து ஜூலியாவுக்கு லவ் லட்டர் எழுதிகிட்டே இருக்க” என்று ஏசுகிறார்.
புரோடியஸுக்கு ஜூலியாவை விட்டு வேலைக்கு போக மனமில்லாமல் அதே ஊரில் இருக்கிறான்.
ஒருநாள் இப்படி ஜூலியா எழுதிய கடிதத்தை புரோட்டியஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா வருகிறார்.
“கையில என்ன லட்டர்”
Image result for The Two Gentlemen of Verona

“அது வந்துப்பா மிலன்ல வேலண்டியன் இருக்கான்ல. அவன் எனக்கு வேலை தேடி வெச்சிருக்கானாம். லட்டர் போட்டிருக்கான்” என்று ஒரே ஒரு பொய்யை சொல்லிவிடுகிறான்.
“பரவாயில்லையே இந்த வேலண்டைன் பய நல்ல பயலால இருக்கானே” என்று அப்பா நன்றி கடிதம் போடுகிறார்.
வேலண்டைன் இதைப் படித்து குழம்புகிறான். அப்புறம் இது தன் நண்பன் புரோடியஸின் குறும்பாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து,சும்மா இல்லாமல் உண்மையிலேயே நண்பனுக்கு வேலை தேடி வைத்து கடிதம் எழுதுகிறான்.
இதைப் பார்த்து புரோடியஸுக்கு அதிர்ச்சி.
பொத்தாம் பொதுவாக சும்மா சொன்ன பொய்யால் இப்போது உண்மையிலேயே மிலன் நகருக்கு போக வேண்டியதிருக்கிறதே என்று எரிச்சலில் காதலி ஜூலியாவை விட்டு பிரிய மனதில்லாமல் பிரிகிறான்.
வேலண்டைன் என்ன வேலை பார்க்கிறானோ அதே வேலைதான் புரோட்டியஸுக்கும்.
கொஞ்சநாள் நன்றாக இருந்த புரோடியஸ் வேலண்டைனுக்கும் மிலன் நகரத்து பிரபுவின் மகள் சில்வியாவுக்கும் உள்ள காதலைக் கண்டு பொறாமைப்படுகிறான்.
நல்லதொரு சந்தர்ப்பத்தில் மிலன் நகர் பிரபுவிடம் வேலண்டைனை மாட்டிவிடுகிறான்.(வேலண்டைன் மாட்டிக்கொள்ளும் காட்சி சுவாரஸ்யமானது)
”கொமரு இருந்தா கைப்பிடிச்சி இழுப்பியோ” என்று வேலண்டைனை அடித்து துரத்திவிடுகிறார் பிரபு.
இப்போது புரோட்டியஸ் கைக்கு அதிகாரம் வந்து விடுகிறது.
அவன் சைடுவாக்கில் நண்பனின் காதலியான சில்வியாவுக்கு ரூட் விடுகிறான். சில்வியா “போயேம்பல பம்ளிமாஸு” என்று திட்டிவிடுகிறாள்.
எப்படி சில்வியாவை பணிய வைப்பது என்று தெரியவில்லை.
புரோடியஸிடம் அவனிடம் புதிதாய் சேர்ந்த உதவியாளனிடம் ஐடியா கேட்கிறான். அதன்படி காதல் கடிதம் எழுதி கொடுத்து விடுகிறான்.
உதவியாளனும் சில்வியாவுக்கு புரோட்டியஸிப்ன் கடிதத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். சில்வியா மயங்குவதாய் இல்லை.
கடைசியில் வேலண்டைனுக்கும் புரோட்டியஸுக்கும் சண்டை வந்து புரோடியஸ் திருந்தும் போது சொல்கிறான்
“ச்சே என் சைத்தான் மனதால் என் காதலி ஜுலியை மறந்துவிட்டேனே. இப்போ அவள எங்கப் போய் தேடுவேன்” என்று வருத்தமடைகிறான்.
அப்போது புரோடியஸின் உதவியாளன் தன் மாறுவேஷத்தை கலைத்து
“கொய்யால நான்தாண்டா உன் லவ்வர் ஜூலியா. ஊர் விட்டு ஊர் வந்தா லவ் பண்ணுன பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ணுக்கு லட்டர் கொடுத்து விடுவ என்ன” என்று திட்டுகிறாள். சுபமாக முடிகிறது.
இதில் பாருங்கள் புரோட்டியஸ் தன் காதலி எழுதிய கடிதத்தை, நண்பன் எழுதிய கடிதம் என்று அவன்அப்பாவிடம் சொன்ன சின்னப் பொய் எங்கல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று
இன்னொரு ஜாலியான ஒப்பீடு
சுவப்னவாஸவதத்தம்
என்ற சமஸ்கிருத நாடகத்தில் உதயணின் மனைவி வாசுவதத்தை தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்(நாட்டின் நன்மைக்காக) என்று ,
தான் தீப்பிடித்து எரிந்தது மாதிரி செட்டப் செய்து தப்பிக்கிறாள்.
உதயணன் தன் முதல் மனைவி வாசுவதத்தை இறந்துவிட்டதாக கவலையடைகிறான். இரண்டாவது திருமணம் முடிக்கப் போகும் பத்மாவதியிடம் வாசுவதத்தை தோழியாக இருக்கிறாள்.
அதன் மூலம் உதயணன் எப்படியெல்லாம் தன்னை நினைத்து உருகுகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
முதல் மனைவி வாசுவதத்தையைஅவ்வளவு லவ் பண்ணுறான் உதயணன் .அதை அவன் பக்கத்தில் இருந்தே கேட்கும் அருமையை வாசுவதத்தை பெறுகிறாள்.
ஆனால் இந்த ’The Two Gentlemen of Verona’ வில் வரும் புரோட்டியஸோ லவ் பண்ணிகிட்டு இருக்கிற பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ண லவ் பண்ணறதப் பத்தி டிஸ்கஸ் செய்திருக்கான் ராஸ்கல்ஸ்...
வாசுவதத்தைக்கு எப்படி இருந்திருக்கும்.
ஜூலியாவுக்கு எப்படி இருந்திருக்கும்..

Prime number என்றால் என்ன ? Vijay Bhaskarvijay

Prime number என்றால் என்ன ?
ஒரு நம்பர் ஒன்று (1) மற்றும் அதே நம்பரால் மட்டுமே மீதம் வராமல் வகுபட்டால் அது பிரைம் நம்பர் என்ற பகா எண்கள் ஆகும்.
6 என்ற எண் 1,2,3,6 ஆகிய எண்ணால் வகுபடும். அது பிரைம் நம்பர் கிடையாது.
7 என்ற எண் 1 மற்றும் அதே எண்ணான 7 னால் மட்டுமே மீதமில்லாமல் வகுபடும்.
அப்படியானால் 7 பிரைம் நம்பர்.
Prime Number தெரியாதவங்க இருக்க முடியாது என்றாலும் ஒருதடவ சொல்லிக்கிறேன்.
இப்போ இந்த Prime Number களோட வர்க்கம் (Square) எடுத்துக் கொள்வோம்.
7 x 7 = 49
11 x 11 = 121
103 x 103 = 10609
இப்படி பகா எண்கள் என்ற பிரைம் நம்பர்களோட வர்க்கத்துல இருந்து “1” கழிச்சிட்டா மீதம் வர்ற விடை எண் ‘24’ என்கிற எண்ணால் மீதம் வராம வகுபடும்.Image result for Prime number
7 x 7 = 49
49-1 = 48
48/24 = 2
103 x 103 = 10609
10609-1 = 10608
10608/24 = 442
நான்கு இலக்க Prime number எடுத்துக்கலாம்
1777 x 1777 = 3157729
3157729 - 1 = 3157728
3157728 / 24 = 131572
2, 3 எண்களைத் தவிர,
எவ்வளவு பெரிய பகா எண்கள எடுத்தாலும்,
அதுகளோட வர்க்கத்துல இருந்து ஒண்ணு கழிச்சிட்டு
24 நம்பரால டிவைட் பண்ணினா
மீதம் எதுவும் கிடைக்காது.
Primenumber² - 1 = ஒரு நம்பர் கிடைக்கும்...
அந்த நம்பரோட Factor ஆ 24 கட்டாயம் இருக்கும்...
Prime Numbers களுக்கும் ‘24’ க்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறது ஆச்சரியமாத்தான் இருக்குது இல்ல.
சின்னப் பசங்களுக்கு, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கிற பசங்களுக்கு கூட இந்த கணித அழகு பற்றி சொல்லலாம்

Friday, December 14, 2018

அக்பர் - பைராம்கான் - Vijay Bhaskarvijay

அக்பர் - பைராம்கான்
இடையே நடந்த Mind Game ,
உளவியலில் ஆர்வமுடையவர்களை ஈர்க்கும் விஷயமாக நிச்சயம் இருக்கும்.
அக்பரின் அப்பாவான மன்னர் ஹிமாயூன் வெற்றி பெற உழைத்தவர் பைராம்கான்.
அக்பரை மிகச்சிறுவனாக இருக்கும் போதே பைராம்கானுக்கு தெரியும்.
அக்பரையும் பாதுகாத்தவர் பைராம்கான்தான். மிக சிறுவயதிலேயே மாமன்னர் பொறுப்பை அக்பர் ஏற்ற போது அக்பருக்கான மரியாதையை பெற்றுத் தருவதில் பைராம்கான் குறியாய் இருந்தார்.
பைராம்கான் அக்பருக்கு நடத்திய முடிசூட்டு விழாவில் அனைத்து மாகாண தளபதிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
அதில் ஒருவர் மட்டும் அக்பர் மாமன்னரானதை விரும்பவில்லை போலும்.
அவர் “நான் ஹிமாயூன் மன்னர் இறந்த துக்கத்தில் இருக்கிறேன். நான் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வரவில்லை. அதற்கு பதிலாக ஹிமாயூன் கல்லறைகு போகிறேன்” என்று விழாவை தவிர்த்தார்.
பைராம்கான் விடவில்லை அவரை கட்டி இழுத்து வந்து “மாமன்னர் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வராதது ராஜதுரோகம்” என்று தண்டனை கொடுத்தார்.
அந்த தண்டனைதான் அனைத்து மாகாண நிர்வாகிகளும் அக்பரைக் கண்டு பயப்படும், மரியாதை கொடுக்கும் சம்பவமாக இருந்தது.
அக்பரை மாமன்னராக ஏற்றுக் கொண்டார்கள்.
சர்வாதிகாரத்தில் இந்த அடக்குமுறை மிக முக்கியமான யுத்தி. சர்வாதிகாரிக்கு எதிராக சிறிய கல் விழும் போதே அதை வெறித்தனமாக அடக்குதல். அக்கால மன்னர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்பதால் அக்பரின் மரியாதையை பைராம்கான் அந்த அடக்குதல் உளவியல் வைத்தே காப்பாற்றினார்.

Image result for akbar
முதன் முதலில் அக்பரை மெலிதாக மிக மெலிதாக அவமானப்படுத்திய தளபதியை தண்டிப்பதன் மூலம் பைராம்கான் மற்றவர்களுக்கு அக்பரின் வானாளவிய சக்தியை புரிய வைத்தார்.
ஆனால் அக்பரின் மேல் பைராம்கானுக்கு சிறு அலட்சியம் இருந்தது. மற்றவர்கள் அக்பரை மதிக்க வேண்டும் என்று ஆவேசமாய் இருந்த பைராம்கான் ஆழ்மனதில் “நம்மால்தான் இச்சிறுவன் ஆட்சி செய்கிறான்” என்ற எண்ணம் இருந்தது.
அக்பரைக் கேட்காமலேயே சில மரண தண்டனைகள் கொடுக்கிறார் பைராம்கான்.
இப்போது அக்பரின் உளவியலாக அவருக்கு பைராம்கான் மேல்
- அன்பு இருக்கிறது.
- மரியாதை அதிகம் இருக்கிறது.
- பயமும் இருக்கிறது.
- நம்மை சுதந்திரமாக விடவில்லை என்ற எரிச்சலும் இருக்கிறது.
இதில்லாமல் அக்பரின் சிறுவயதில் அக்பரின் அத்தை மகள் சலீமாவை பைராம்கான் திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமணத்தில் அக்பருக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் ஹிமாயூன் இல்லாத சமயத்தில் பைராம்கான் கட்டுப்பாட்டில் இருந்த் அக்பரால் எதையும் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவருக்கு பைராம்கான் தன் அத்தைப் பெண் சலீமாவை திருமணம் செய்தது பிடிக்கவில்லை.
அக்பர் போர் பயிற்சிகளை நன்றாக பயில வேண்டும் என்பதில் பைராம்கான் கண்டிப்பாக இருக்கிறார். இது அக்பர் மனதில் சிறுவனுக்கே உள்ள அடக்குமுறைக்கு எதிரான எண்ணத்தையும் கோபத்தையும் வளர்க்கிறது.
அக்பருக்கு மிகவும் பிடித்த யானை ஏறுதலை பைராம்கான் பாதுகாப்பில்லை என்று தடுக்கிறார். அக்பர் கடுப்பாகி பைராம்கான் ஒய்வெடுக்கும் மாளிகை அருகிலெயே சென்று வேண்டுமென்றே யானைகளை பிளிரவிட்டு பயிற்சி எடுக்கிறார். இது பைராம்கானுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.
இன்னொரு பக்கம் அக்பரின் வளர்ப்புத்தாய் மாஹம் அனகாவுக்கும் பைராம்கானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அக்பர் சிக்கித் தவித்தார்.
குறிப்பிட்ட சமயத்தில் அக்பரின் ஆழ்மனது பைராம்கானின் அதிகாரத்தை மீற ஆசை கொண்டிருக்கலாம். அதனாலேயே கூட அவர் மாஹம் அன்காவின் பேச்சை அதிகம் நம்பி இருக்கலாம்.
பைராம்கான் படகில் செல்லும் போது யானை ஒன்று கரையில் குளிக்கும் போது பயமுறுத்தி பைராம்கானை தள்ளி விடுகிறது. படகில் விழுந்த பைராம்கான் பதற்றமாகிறார்.
அக்பரோ யானைப்பாகனை இழுத்து வரச்சொல்லி பைராம்கானிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதைப் பார்த்த பைராம்கான் சினம் கொண்டு யானைப்பாகனை அக்பரை வகை செய்யாமல் கண்டிக்கிறார்.
தன்னை கான் பாபா மதிக்கவில்லை என்று அக்பர் மேலும் கடுப்பாகிறார்.
குறிப்பிட்ட சமயத்தில் பைராம்கான் மேலுள்ள அதிருப்தி அதிகமாகி அக்பர் அவரை அழைத்து அரசியல் நிர்வாகத்தை விட்டு மெக்கா போக சொல்கிறார்.
பைராம்கான் தன் பரிவாரத்துடன் போகும் போது கூட அவர் கலவரம் செய்வார் என்று அவரை தன் படையை வைத்து ரகசியமாக கண்காணிக்கிறார்.
பைராம்கான் அக்பருக்கு எதிராக இயங்கும் எண்ணமே கிடையாது.
ஆனால் தன் நல் எண்ணம் புரியாமல் அக்பர் தன் மேலேயே உளவு பார்க்க முறியடிக்க படையை அனுப்பி வைத்தது பற்றி எரிச்சலாகி “இதெல்லாம் மாஹம் அனகா வேலைதான். அவளை நான் வெல்வேன்” என்று குரல் எழுப்ப அக்பரின் படைகள் பைராம்கானை முறியடித்து பைராம்கானை கைது செய்து அக்பரிடம் அழைத்து வருகிறார்கள்.
பைராம்கான் அக்பரின் காலில் விழுந்து கண்ணீருடன் அவர் காலில் முத்தமிடுகிறார். அக்பர் “கான் பாபா” என்று அன்போடு அழைத்து தன் அருகே அமர வைத்து கண்ணீரை துடைத்து விடுகிறார்.
மேலோட்டமாய் பார்க்க அதொரு செண்டிமெண்ட் காட்சி மாதிரி தெரிந்தாலும் அதில் அக்பர் உயர்ந்தவர் என்பதை பைராம்கான் ஏற்றுக் கொண்டது பற்றி அக்பர் அடைந்த மகிழ்ச்சியே தெரிகிறது.
அதை பெரிய தவறாக சொல்ல முடியாது. 18 வயதுவரை அக்பர் பைராம்கானை மதிக்கவே செய்தார்.
அக்பரிடம் சொல்லிக் கொண்டு பைராம்கான் மனைவி குழந்தையோடு பயணம் செல்கிறார். பயணத்தில் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்.
பைராம்கானின் மனைவி சலிமா தன் சிறுகுழந்தையோடு அக்பரை பார்க்க மெலிந்து ஏழையாய் வருகிறார்.
தன் அத்தைப் பெண்ணின் நிலைமை கண்டு வருந்துகிறார் அக்பர்.
சலீமாவை அக்பரே திருமணம் செய்து கொள்கிறார். பைராம்கானின் மகன் பின்னால் வளர்ந்து அக்பரின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருக்கிறான்.
அக்பருக்கு தன் நடுக்கம் பற்றி தெரிந்த ஒரே உயிரான பைராம்கான் மேல் ஒரு எரிச்சல்.
பைராம்கானுக்கு “இவன் பொடியாள்” என்ற ஆழ்மன எண்ணத்தை அவரளவில் கடக்க முடியவில்லை.
சலீமாவை பைராம்கான் திருமணம் செய்தது அக்பருக்கு பிடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. ஒருவேளை
இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது வரலாற்று யூகம்தான்.
யானைப்பாகனை அக்பரே கொல்லாமல் விட்டது பைராம்கான் மனதை பாதித்திருக்க வேண்டும். “நாம் அக்பரின் உணர்வை நுணுக்கமாக மதித்தது மாதிரி அவர் நம்மை மதிக்கவில்லையே “ என்று பைராம்கான் நினைத்திருக்கலாம்.
உட்சபட்ச அதிகாரத்தை பெறும் அனைவர் வாழ்க்கையிலும் ஒரு பைராம்கான் இருப்பார்.
அக்பர் கழட்டிவிட்டது மாதிரியே பைராம்கானை அவர்களும் கழட்டி
விட்டிருப்பார்கள். விடுவார்கள்.
அக்பர் - பைராம்கான் Mind Game என்பது தனிப்பட்ட சம்பவங்களில் கோர்ப்பு மட்டும் அல்ல.
அவை ஒரு அற்புதமான உளவியல் மாடல்கள்.
அங்கே
அக்பராலும் எதுவும் செய்ய முடியாது.
பைராம்கானாலும் எதுவும் செய்ய முடியாது.
அது அப்படியே, அப்படி அப்படியே நடக்கும்...
இருந்தாலும் தான் வளர்த்த சிறுவனின் காலிலேயே அழுதுகொண்டே முத்தமிட்டு மன்னிப்பு கேட்ட பைராம்கானின் முகபாவனை நினைத்தால் கஷ்டமாய்தான் இருக்கிறது.
அக்பருக்கும் அது மனவேதனையை கொடுத்திருக்கும்.
அதே சமயம் ”அதிகார உணர்வு” என்றும் வீரிய உணர்வு அதை வேகமாக கடந்தும் போயிருக்கும்.
கடந்து போனால்தான் அதிகாரத்தை அடையமுடியும் என்பதை பதினெட்டு வயது சிறுவனான அக்பர்
உணர்ந்த காரணத்தால்தான்
அவரால் மாமன்னராய் மொத்த இந்தியாவையே
கட்டி ஆட்சி செய்ய முடிந்தது...

தோசை சுடும் போது - விஜய் பாஸ்கர்விஜய்

தோசை சுடும் போது
தோசைக்கல்லு சூடாகும் போது அதுல நீரத் தெளிச்சா கல்லுல ஒட்டி மெல்ல ஆவியா போகும்.
இன்னும் தோசைக்கல்லு சூடாகி சரியா 100 டிகிரி செல்சியஸ் வரும் போது தண்ணி தெளிச்சா அந்த நிர்துளிகள் உடனே ஆவியா போயிரும்.
ஆனால் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி நல்லா சூடாகும் போது நீர் துளிகள் கல்லுல விழுந்தா அது ஆவியா உடனே போகாது.
அந்த நீர்த்துளிகள் ஒருமாதிரி துள்ளி துள்ளி ஒடும்.
நாம இத பார்த்தும் பார்க்காதது மாதிரி தோசை சுட போயிருவோம்.
ஆனால் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் டாக்டரான Leidenfrost ஏன் அப்படி துள்ளி துள்ளி ஒடுதுன்னு கேள்வி கேட்கிறாரு. யோசிக்கிறாரு.
யோசிச்சி 1756 ஆவது வருடம் அதோட காரணம் கண்டுபிடிச்சி அத Leidenfrost Effect அப்படின்னு சொல்றாரு.
Leidenfrost Effect அப்படின்னா...
எப்ப ஒரு சமதளம் அதிகம் சூடாகி 100 டிகிரி செல்சியஸ் மேல போகும் போது
அது மேல ஒரு நீர்துளியை விடும் போது நீர் துளியோட கீழ் பக்கம் இருக்கிற கொஞ்சம் இடம் உடனே ஆவியாகி அந்த நீர்துளிக்கு ஒரு Air Cushion மாதிரி செயல்படுது.
அந்த Air Cushion மேல உட்காந்துகிட்டுதான் நீர்த்துளி இங்கும் அங்கும் ஒடுது.
இதக் கேட்க எளிதா இருந்தாலும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
Leidenfrost Effect நீர்ல மட்டுமில்ல பல திரவங்கள்ல நடக்கும்.
உதாரணமா Liquid Nitrogen துளிகளை நம்மோட தரையில விட்டாலே அது Leidenfrost Effect காட்டும்.
ஏன்னா திரவ நைட்ரஜனப் பொறுத்தவரை நம்ம சாதரண வெப்பநிலையே கொதி வெப்ப நிலைதான். அது ரொம்ப ரொம்ப குளிர்லதான் திரவமா இருக்கும்.
அதில்லாம Orbeez ball நம்ம எல்லோரும் பார்த்திருப்போம்.
Image may contain: text that says "Drop of liquid held up by layer of vapor 0.2 mm 0.1 mm Hot surface"

குட்டியா கடுகு மாதிரி இருக்கும் தண்ணில ஊறப் போட்டா பெரிசாகும்.
அதோட அளவு மாதிரி நூறு மடங்குவரை பெரிதாகும் பாலிமர்கள்தான் Orbeez ball.
கலர் கலராய் இருக்கும்.

Related image
அதை வாங்கி ஊறப்போட்டு அதை சூடான பாத்திரத்தில் ( 100 டிகிரிக்கும் மேலே) போட்டால் அந்த Orbeez ball என்ற பந்துகள் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்க்கலாம்.
அதற்கு காரணமும் இந்த Leidenfrost Effect தான்.
இரவு 12 மணிக்கு இப்பதிவை இதுக்கு மேல நீட்ட கடுப்பா இருக்கு.
Leidenfrost Effect புரிஞ்சதா இப்ப... அதான் நோக்கம்..
அடுத்த தடவ தோசை சுடும் போது உங்கள் வீட்டு வாண்டுகளை அழைத்து Leidenfrost Effect Demo காட்டுங்கள்.
அவ்ளோதான்

எளிய முறையில் கணிதம் - 1 - விஜய பாஸ்கர்விஜய்

1/2 + 1/2 வை சேர்ப்பதை வரைய வேண்டுமானால்.
ஒரு கட்டம் வரைந்து அதில் பாதியாக 1/2 யையும். இன்னொரு கட்டம் வரைந்து அதில் பாதியாக 1/2 வையும் குறிப்பிட்டு.
இரண்டு பாதியும் சேரும் போது ஒன்றோடு ஒன்று சேர்வதால் அது முழுக்கட்டமாக ஆகிவிடும் என்று வரைந்து காட்டலாம்.
Fraction பெருக்கலை எப்படி காட்டுவது.
இந்த படத்தைப் பாருங்கள்.
2/ 3 x 1 / 4 = ? என்பதை எப்படி கட்ட வரைப்படமாக காட்டுவது.
ஒரு கட்டம் எடுத்து அதை மூன்று சம பங்காக பிரித்து அதில் இரண்டை எடுத்துக் கொண்டால் அதுதான் 2 / 3 .
ஒரு கட்டம் எடுத்துக் கொண்டு நான்கு சம பங்காக பிரித்து அதில் ஒன்றை எடுத்துக் கொண்டால் அதுதான் 1 / 4 .
இரண்டு கட்டப் பிரிவுகளும் எதிர் திசையில் இருந்தால் நல்லது.
ஒன்று இடமிருந்து வலம் என்றால் மற்றொரு கட்டம் மேலிருந்து கீழாக இருக்க வேண்டும்.
2/ 3 x 1 / 4 என்பதை காட்ட 2 / 3 கட்டம் மேல் அப்படியே 1 / 4 கட்டத்தை வைக்க வேண்டும்.
இப்படி வைக்கும் போது 12 சிறுகட்டங்கள் கிடைக்கும்.
இதில் 2/ 3 உள்கட்டங்களும், 1/ 4 உள்கட்டங்களும் மோதும் இடங்களை மார்க் செய்து கொள்ள வேண்டும். (படம் பார்க்க)
இங்கே 12 சிறுக்கட்டங்களில் அப்படி இரண்டு கட்டங்கள் பொதுவாக வந்து மார்க் ஆகி இருக்கின்றன.
2/ 3 x 1 / 4 = ( 2 x 1 ) / ( 3 x 4 ) = 2 / 12

No automatic alt text available.
2 / 12 என்பதுதான் கட்டத்தில் மார்க் ஆகி இருக்கும் பகுதி.. அதாவது 12 கட்டங்களில் 2 கட்டங்கள்தாம் 2 / 12
2 / 12 என்பதை வெட்டுக்குடுத்து 1 / 6 என்று பொதுவாக மாற்றிவிடுவோம்.
அதே கட்டத்தை ஆறாக பிரித்து அதில் ஒரு பகுதியை மார்க் செய்தால்.
அந்த 1 / 6 பரப்பளவும் முந்தையை கட்டத்தில் உள்ள 2 / 12 பரப்பளவும் சமமாக இருக்கும்..
இப்படி புரிந்து கொண்டால் பின்னத்தைக் கொண்டு பின்னத்தை பெருக்கும் முறை பற்றி ஒரளவுக்கு உணர்வு அறிவை அடையலாம்...

Thursday, December 13, 2018

Alex Faickney Osborn Brainstorm by Vijay BhaskarVijay

நியூயார்க் நகரில் பிறந்து
1941 ஆண்டு விளம்பர கம்பனியின் நிர்வாகியாய் வேலை பார்த்த Alex Faickney Osborn என்பவருக்கு ஒரு பிரச்சனை வந்தது.
தன் கம்பனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்கிறார்களே தவிர புதிதாய் தொழிலுக்கு எந்த விதமான யோசனையும் சொல்வதில்லை.
ஏன் இவர்கள் இப்படி ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என்று Osborn ஆராய்ச்சி செய்கிறார்.
செய்து அவர் கண்டுபிடித்ததுதான் Brainstorming யுத்தி.
Storm என்றால் புயல்...
Brain என்றால் மூளை, அறிவு, யுத்தி, யோசனை.
Osborn அந்த இந்த Brain ஐ Storm ஆக ஊழியர்கள் கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தார்.
ஊழியர்களை இப்படி யோசனை சொல்வதை தடுப்பது அவர்கள் ஆர்வமின்மை என்பதை விட உயர் அதிகாரிகளின் அதிகாரம் மற்றும் உயர்வு மனப்பான்மைதான் என்பதையும் கண்டுகொள்கிறார்.
அவர் Brainstorming க்கு நான்கு வழிகள் சொல்கிறார்.
1.Go for quantity : நிறைய யோசனைகள் வரட்டும்.
ஒரு Brainstorm குழுவை அமைத்துக் கொள்ளுங்கள். அப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உயர்வு தாழ்வில்லாமல் அதில் அழைக்கலாம். அவர்களுக்கு பிரச்சனையை புரிய வையுங்கள். குறிப்பிட்ட பொருளை மட்டும் சரியான நேரத்தில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு Brainstorm நடத்துகிறீர்கள்.
முதலில் அது எப்படி உற்பத்தி ஆகிறது. அதன் கச்சா பொருள் எங்கிருந்து வருகிறது. அது என்ன முறையில் உற்பத்தி ஆகிறது. அதன் டிசைன் போடுவது யார். அதை யார் Pack செய்கிறார்கள். அது எப்படி லாரியில் போட்டு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது என்று அனைத்தையும் விளக்க வேண்டும். விளக்கிவிட்டு அங்கிருக்கும் அனைவரையும் அவர்களுக்கு தோன்றும் யோசனையை சொல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.
“சார் டிசைன்ல ஒரு பூ படம் அழகுக்காக போட்டிருக்காங்க. புரொடக்சன்ல அத கொண்டு வர்றது கஷ்டமா இருக்கு”
“ இந்த பொருள் உற்பத்தினாலேயே தொழிலாளர்கள் சோர்ந்து போயிர்றாங்க. ஏன்னே தெரியல. சும்மானாலும் இது கஷ்டம் கஷ்டம்னு ஒரு வதந்தி மாதிரி பரவி அந்த நம்ப ஆரம்பிச்சிட்டாங்க”
இப்படி பலரும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். அதை பதிவு செய்து கொண்டே வர வேண்டும். அங்கே தரமான ஐடியாக்களை விட அதிமான ஐடியாக்களே தேவை. Quality முக்கியமில்லை. Quantity யே முக்கியம். நிறைய வரட்டும். வருவதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்.
2. Withhold criticism: சும்மா யோசனைகளை விமர்சனம் பண்ணாதீங்க.
நிறைய யோசனைகள் வரும் போது அதைப் பார்த்து நக்கல் பண்ணக்கூடாது. சிரிக்க கூடாது. இதெல்லாம் சாத்தியமான்னு சொல்லக் கூடாது. முட்டாள்தனமா பேசாதீங்கன்னு சொல்லக் கூடாது. யதார்த்தம் புரியாம பேசாதீங்கன்னு சொல்லக் கூடாது.எந்த ஐடியாக்களையும் விமர்சனமே செய்யக் கூடாது. அப்போதுதான் Quantity அதிகம் வரும்.
3.Welcome wild ideas : தைரியமான யோசனைகளை வரவேற்க வேண்டும்.
“ஏன் சார் இந்த பொருள உற்பத்தி பண்ண இவ்ளோ டென்சன். இதுல பெரிய லாபம் வரலன்னா இந்த உற்பத்தியையே நிறுத்திருங்க சார். இந்த ஒரு பொருளால கம்பெனி மொத்தமும் பதற்றமாவே இருக்கு” என்றொருவர் சொன்னால் அது தைரியமான
“குருட்டுத்தனமான முரட்டுத்தன ஐடியாவாகும்” அதையும் வரவேற்கவேண்டும். ஒருவேளை அதில் கூட பிரச்சனையின் தீர்வு இருக்கலாம். பல பிரச்சனைகளில் wild ideas கள்தாம் வெற்றி பெறும். மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம் எல்லாம் முதலில் wild idea வாக இருந்ததுதான். பின்னால் அதுவே உபயோகமான ஐடியாவாக மாறியது.
4.Combine and improve ideas : இரண்டு மூன்று யோசனைகளை ஒன்றாக்குதல்.
இரண்டு யோசனைகளை ஒன்றாக்கி வைத்தல். பல ஐடியாக்கள் வரும் போது அதில் சில ஐடியாக்களை ஒன்றாக்க முடியும். ஏன் தொழிலாளர்கள் மதியம் உணவு முடிந்து லேட்டாக வருகிறார்கள் என்றொரு பிரச்சனை இருந்தால்
1. கேண்டீன் தூரமாக இருக்கிறது.
2. வெற்றிலை பாக்குக்கடை தூரமாக இருக்கிறது
என்று இரண்டு யோசனைகள் வரும்.
இந்த இரண்டையும் சேர்க்கலாம். இதன் தீர்வு என்று வரும் போது கேண்டீனையும் பக்கத்தில் கொண்டு அதே வேளையில் கேண்டீன் அருகிலேயே மதியம் மட்டும் திறக்கபடும் கம்பெனி வெற்றிலைபாக்கு கடை தீர்வாக அமையலாம்.
இப்படி பல்தரப்பட்ட ஐடியாக்களை பெற்ற பிறகு ஒவ்வொன்றின் நன்மை தீமை பற்றி அலசி ஆராய்ந்து பிரச்சனைக்கு எளிதான தீர்வை கண்டு அடையலாம்..
இதுதான் Brainstorm யுத்தி.
வீட்டை விட்டு வெளியே டூர் போகும் போது கடிகாரத்தின் பேட்டரியை கழட்டி வைத்து வந்த உடன் பேட்டரியை போடலாமே என்பதை சாதரணமாக ஒருவர் சொல்ல வெட்கப்படுவார். ஆனால் Brainstorm வகையில் அதை கூச்சமில்லாமல் சொல்லுவார்.
அதை Wild idea வாக ஏற்றுக் கொண்டு அதன் நன்மை தீமையை அலசுவார்கள்.
நன்மை - பேட்டரி மிச்சமாகும், செலவு குறைவும்.
தீமை - ஒருவேளை டயல் சுத்தாமல் இருந்தால் அதில் அழுக்கு போய் அடைத்துக் கொண்டு கடிகாரம் ரிப்பேராகும்.
அடிக்கடி கடிகாரத்தை எடுத்து பேட்டரி மாற்றும் போது அது உடையலாம். ரிஸ்க் அதிகம்.
ஆகையால் டூர் செல்லும் போது பேட்டரி கழட்டி வைக்கும் ஐடியா நிராகரிக்கப் படுகிறது.
ஒருவேளை ஒரு பேட்டரி விலை ஒரு லட்ச ரூபாய் ஆகிரது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது அதே டூர் செல்லும் போது பேட்டரி கழட்டி வைக்கும் ஐடியா ஏற்றுக் கொள்ளப்படும்.
Brainstorming யின் நோக்கம் அப்படி புது புது ஐடியாக்களை கொண்டு வர சுதந்திரமாய் சிந்திக்க தூண்டுவதுதான்.
இந்த Brainstorming க்கு Chatham House Rule ஐ அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
Chatham House Rule என்றால் என்ன?
அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் நடக்கிறது. அங்கே பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. சிலது கூடுதல் இருக்கும். சிலது குறைவாக இருக்கும். சிலது மொக்கையான கருத்தாய் இருக்கும். சிலக் கருத்துக்கள் முட்டாள்தனமாய் இருக்கும். ஒவ்வொரு கருத்துக்களை ஒவ்வொரு நபர்கள் பேசியிருப்பார்கள்.

Image result for Alex Faickney Osborn
Chatham House Rule என்ன சொல்கிறது என்றால் மீட்டிங் முடிந்ததும் வெளியே வரும் போது, வந்த பிறகு, அம்மீட்டிங்கில் பேசப்பட்ட கருத்துக்களை எடுத்து விவாதிக்கலாம். சமயத்துக்கு ஏற்றால் போல “அன்னைக்கு மீட்டிங்கல இதப் பேசினோமே” என்று ரீகால் பண்ணலாம்.
ஆனால் அக்கருத்துக்களைச் சொன்னவர்களின் பெயர்களை வெளியே சொல்லக் கூடாது.
“நீ அன்னைக்கு மீட்டிங்கல இப்படிச் சொன்னியே மொக்கையா. அடிப்படை அறிவில்லாம” என்று சொல்லக் கூடாது.கேலி பேசக் கூடாது. அது Chatham House Rule க்கு எதிரானது.
கருத்துக்களைப் பேசலாம். அந்தக் கருத்துக்களை பேசியவர்கள் பெயரைச் சொல்லக் கூடாது.
இந்த ரூலை கம்பெனிகளில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த பிறகே நிறைய யோசனைகள் தைரியமாக சொல்லப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் வீடுகளில் கூட Brainstorming செய்து பார்க்கலாம்...
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஐடியாக்கள் உங்களுக்கு வரும்.
யாருக்கு அதிகம் தெரியாது என்று நினைக்கிறீர்களோ அவரே கூட முக்கியமான தீர்வை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

Monday, December 10, 2018

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி - சூர்யா சேவியர்

தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகிறது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் நம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி, தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று. ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பேசப்பட்ட மொழியாகும்.

Image may contain: 1 person, glasses


இது, உண்மையில் இந்தியா முழுமையும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும்.ஆரியர்கள்,நாகர்கள் மீதும்,அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியை விட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலந்தனர்.
தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்கள் தாய் மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால், தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பது புரியும்.


தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்புப் பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும்-நாகர்களும்,திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகிறது.
நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிக்கும் பெயராகும்.
எனவே தாசர்கள்-நாகர்கள்-திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூற வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டு தான். ஒன்று ஆரியர்கள்.
மற்றொன்று நாகர்கள்.
( பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7 பக்கம்:300)

இந்து என்பது மதமல்ல

இந்து என்பது மதமல்ல.சட்டங்களின் தொகுப்பே.
மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் பொருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம். சிலருக்குப் புரட்சியாகத் தோன்றலாம். எனவே என் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறேன்.
இந்துக்கள் மதம் என்று அழைப்பது உண்மையில் சட்டங்களையும் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். இந்த சட்டங்களின் தொகுப்பை, மதமென்று கூறுவதை நான் மறுக்கிறேன். மதம் என்று பெயரிட்டு மக்கள் முன்பு நிறுத்தப்படுகின்ற இது போன்ற சட்டத் தொகுப்பால் விளைகின்ற கேடுகள் பல.
முதல் கேடு:ஒழுக்கத்துடன், சுதந்திரமான, தன்னிச்சையான வாழ்க்கையை இது மறுக்கிறது. மாறாக அது வெளியில் இருந்து திணிக்கப்படும் விதிகளை அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு நடக்கிற இழிநிலைக்கு வாழ்க்கையைத் தள்ளிவிடுகிறது. கொள்கை எண்ணத்திற்கு இந்து மதம் எனப்படுவதில் இடமில்லை.
கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் நிலைதான் இருக்கிறது. ஆனால், இந்தச் சட்டத் தொகுப்பால் விளைகின்ற பெருங்கேடு என்னவெனில், இச்சட்டங்களே முக்காலத்திற்கும் பொருந்துபவை என்று இருப்பது தான். அனைத்து வகுப்புக்கும் பொதுவான ஒரே சட்டம் இல்லை என்ற வகையில் அது மோசமானது.ஆனால், எத்தனை தலைமுறையானாலும் சரி, இந்த அநியாயம்-அநீதி என்பது நிரந்தரமாக நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று என ஆக்கி வைக்கப்பட்டுள்ளதே!

Image may contain: 1 person, glasses and close-up

சட்ட வல்லுநர்கள் அல்லது மகான்கள் என்று அழைக்கப்படுகிற சில மனிதர்களால் இவை ஏற்படுத்தப்பட்டது என்பதால் நான் இதை மறுக்கவில்லை. இதன் இறுக்கமும், மாறாத்தன்மையுடைய குணங்கள் இருப்பதாலேயே, நான் இதை மறுக்கிறேன்.
ஒரு மனிதனின் வாழ்நிலையும், சூழ்நிலையும் மாறும் போது-அந்த மனிதனின் மனநிலை மாறும். அப்படி இருக்கையில், நிரந்தரமான இந்தச் சட்டத் தொகுப்பை எவ்வித மாற்றமுமின்றி, மனித இனம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? எனவே, இது போன்ற ஒரு மதத்தை அழித்தாக வேண்டும் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை.
இது போன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், மதத்திற்கு எதிரானவை அல்ல. சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாய கடமை.
மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த 'மதம்' என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்கு கூறப்பட்டது மதமே அல்ல:சட்ட விதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
இந்தப் பணியைச் செய்து முடித்ததுமே, மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளை சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்குத் தானாகவே எழும்.
(பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:-1, பக்கம்:66)

18 ம் படி என்றால் என்ன? சூர்யா சேவியர்


18 படிக்கு வைதீகம் தன் தேவைக்கேற்ப பல விளக்கங்கள் சொல்லும்.
அது கண்மாய்கரையில் இருக்கும் கருப்பசாமியும் தன் கடவுளின் அவதாரம்,அம்சம் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை தன்னுள் ஈர்க்க வைக்க பல்லிளித்தக் கதை.
திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டு. இவர்கள் தங்களை கடவுளுக்கு அடுத்த நிலையில் தாங்கள் தான் என்று சொல்லிக் கொள்வார்கள். இவர்களால் அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் 18.
1.சாணார் (நாடார்)
2.கருமறவர் (செங்கோட்டை மறவர்)
3.பாணர்
4.குயவர்
5.நசுரானியர்(சிரியன் கத்தோலிக்கர்)
6.துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
7.குறவர்
8.ஈழவர்-தீயர்
9.வாணியர்
10.புலையர்
11.பறையர்
12.கம்மாளர்
13.கைக்கோளர்
14.இடையர்
15.நாவிதர்
16.வண்ணார்
17.பரவர் (தீவாரர்)
18 சக்கிலியர் (தெலுங்கர்)
இந்த 18 க்கும் மேலே தான் நாயர்களும்-நம்பூதிரிகளும் என்ற பொருளில் நம்பூதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட 18 படி மேலே உள்ள ஐயப்பன். இந்த 18 சாதிகளுமே தோள் சீலை மறுக்கப்பட்ட சாதிகள் தான்.
18 பட்டியைக் கூட்டுடா என்ற பஞ்சாயத்துச் சொல்லும் இதையொட்டியதே.
18 சாதியையும் ஊர் அம்பலத்தில் கூட்டி தண்டனைகள் மற்றும் வரிகள் தீர்மானிக்கப்பட்டது.
பிராமணீய வைதீக கடவுள்களை
18 சித்தர்கள் கடுமையாய் சாடினர்.கிண்டல் கேலி செய்து மூடத்தனத்தை எதிர்த்தனர். கடவுளை வணங்கினால் நோய்
தீராது என்று வைத்தியம் செய்தனர்.
நட்ட கல்லும் பேசுமோ என்று
கேட்டனர்.இது இங்கு புதிதாய் காலூன்றிய வைதீக மதம் இந்த சவாலை சதிமூலம் தீர்வு கண்டது.18 சித்தர்கள் அழகர் மலை வந்திருந்தனர்.
அவர்கள் அழகர் கோவில் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க
வந்திருப்பதாய் பட்டரின் கனவில் கடவுள் சொன்னதாய்கூறி
18 பேரை வெட்டும்படி கூறப்பட்டது.மூடர்கள் வெட்டிச் சாய்த்தனர்.
அதன்பிறகு வைதீகமதம் நிம்மதியடைந்து அந்தப் 18
சித்தர்களை மிதித்தே தங்களின் கடவுள் மேலேறியதாய் பொருள்
கொண்டு 18 படிகளை அமைத்தனர்.அதுவே 18 ம்படியாகும். சித்தர்கள் காலம் 800 முதல் 1000 என வரையறுத்துள்ளனர்.
அழகர் கோவில் வரலாறு என்ற நூலை பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டது. சித்தர்கள் பற்றிய பதிவின் குறிப்புகள் அதையொட்டியதே.
18 படி குறித்த பார்ப்பனியக் கதையை மறுத்து,சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வரலாற்றை, சமூக சீர்திருத்தப் போராளி நாராயண குரு வரலாறில் படிக்கலாம்.
Image result for ayyappan and 18 steps

சமூக சீர்திருத்தமே நமது மரபு - சூர்யா சேவியர்

சமூக சீர்திருத்தமே நமது மரபு
-தோழர். பினராயி விஜயன்
(16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து....)
சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு...
நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்த்தான் “இது ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட இந்த மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு சக்திகள் மட்டும் பங்கெடுக்கவில்லை.
சமூக சீர்திருத்தங்கள் மூலம், உரிமைகள் அடைய வேண்டிய, நன்மைகளைப் பெற வேண்டிய, பலனடைய வேண்டிய பிரிவினர் யாரோ அவர்களை, அன்றைய நம்பிக்கைகளின், சம்பிரதாயங்களின் சக்திகளைப் பயன்படுத்தி சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு எதிராக அணி வகுக்கும்படி செய்ய பிற்போக்கு சக்திகளால் முடிந்தது.
நமது நாடு பார்த்த மிகக் கொடூரமான சடங்கு, சதி என்ற ஒன்றாகும். கணவர் இறந்துவிட்டால், மனைவியை கணவரின் அந்த சிதையில் தள்ளிவிடும் வழக்கம்....ஒரு மூட நம்பிக்கை. அந்த சதி என்ற வழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. அது சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலானால் மட்டுமே நடந்தது.
நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அன்றைய கணக்குப்படி 1813 முதல் 1829 வரையிலான காலகட்டத்தில் 8135 பெண்கள் சிதையில் குதித்து உயிரிழந்தார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்ந்திருந்தால், எத்தனை ஆயிரம், எத்தனை லட்சமாகியிருக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்...என்ன ஆகியிருக்கும் நமது நாட்டின் நிலைமை? ஆனால் இந்த சடங்கின், மூடநம்பிக்கையின் பெயரில், இந்த வழக்கத்திற்கெதிராக சட்டம் இயற்றப்பட்ட பிறகும், பெண்கள் இதுபோன்று சிதையில் குதிக்க முயன்றார்கள்....சிலர் குதிக்கவும் செய்தார்கள். அதற்கெதிராக பெரிய எதிர்ப்புகளும் கிளம்பின.
இங்கே இ.எம்.எஸ், வி.டி, எம்.ஆர்.ஜி, பிரேம்ஜி போன்றவர்கள் எல்லாம் அன்றைய பிராமண சமுதாயத்திலிருந்த தவறான வழக்கங்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டகளைத் தொடங்கினார்கள். அதன் பகுதியாக விதவை மறுமணம் சாத்தியமாகும் நிலை வந்தது. அதுபோல, அன்றைய சமூகத்தில் இருந்த வித்தியாசமான சூழலின் அடிப்படையில் இளம்பெண்களை, அதாவது பருவமடைவதற்கு முன்பாகவே, சிறுமிகளை படுகிழவர்களுக்கு மணம் முடித்து வந்தார்கள். அந்த சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே அந்த கிழவனின் கதை முடிந்துவிடும். பின்பு அந்தச் சிறுமி தலை மொட்டையடிக்கப்பட்டு இருட்டறையில் அடைந்து கிடக்கவேண்டும். அதற்கெதிராக முன்பு குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தத் துணிந்த போது அவர்களை ஜாதி விலக்கம் செய்ய முடிவெடுத்தார்கள்....பயமுறுத்தப்பட்டார்கள்...பிற்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது.
நமது நாட்டில் சில இடங்களில் மனிதப்பலி கொடுக்கும் முறை இருந்தது. பின்னர், அது மிருகப்பலியாக மாற்றப்பட்டது. மிருக பலியும் செய்யக்கூடாது என்ற நிலை வந்தபோது தான் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து கலக்கி இரத்தம் போன்ற திரவத்தை உருவாக்கி அடையாளரீதியாக பலியிடும் முறை வந்தது.
இதெல்லாம் சடங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும். நமது நாட்டில், நமது மாநிலத்தில் என்னவெல்லாம் வகையிலான மாற்றங்கள்? வழக்கங்கள் என்பது மரபுவழியாக கடைபிடிக்கப்படுபவை ஆகும். அது காலகட்டங்கள் தோறும் மாற்றமடையும். ஒரு காலத்தில் இருப்பது பின்வரும் காலங்களில் இருக்கவேண்டும் என்பதில்லை.
முன்பெல்லாம் கோவிலில் நுழைவது என்றால், கோவில் குளத்தில் நன்றாகக் குளித்து, அந்த ஈரத்துணியுடன் தான் செல்லவேண்டும். இப்போது, எல்லோரும் அப்படியா கோவிலுக்குள் நுழைகிறார்கள். உடலை தங்கள் வசதிக்கேற்ப சுத்தம் செய்துகொள்ளுகிறார்கள். ஆனால், கோவிலில் அப்படியே தானே நுழைகிறார்கள்?
முன்பு பெண்களின் விஷயத்தில் என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது? மாதவிடாய் வந்துவிட்டால்...அந்தப் பெண்களுக்கு வீட்டில் கூட இருக்கமுடியாது. வசிக்குமிடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. வீட்டிலிருந்து தனியே வேறொரு இடத்தில் அதற்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தங்கிக்கொள்ள வேண்டும்....ஆனால் இப்போது?
எல்லாம் மாற்றங்கள் அல்லவா..?நமது கண் முன்னே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லவா?

முன்காலத்தில் பிரசவம் நடந்தால் ‘வாலாய்மை” (பிரசவ நேரத்தில் அசுத்தம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப் பட்ட தீட்டு). மரணம் நடந்தால்...குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் “புலை” (இறப்பினால் ஏற்படும் தீட்டு)..எத்தனை நாட்கள் அதற்கு...?ஆனால் இப்போதோ மரணம் நடந்து சவ அடக்கம் முடிந்தவுடன், ஒருவர் கூறுவார்,”எல்லா காரியங்களும் இத்துடன் முடிந்துவிட்டது. கலைந்து செல்பவர்கள் கலைந்து செல்லலாம்.”என்று.... எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். இதுதானே சடங்குகளின் நிலைமை?
மாற்றங்கள் நிகழும் போக்கை நாம் பார்க்கவேண்டும் அல்லவா? இத்தகைய மாற்றங்கள், முன்பு சொன்ன சமூக சீர்திருத்த நாயகர்களின் தலையீட்டினால் ஏற்பட்டது தானே?

Image may contain: 1 person
இங்கே முன்பு மார்பு மறைக்க உரிமை இல்லை அல்லவா? அவ்வாறு மார்பு மறைக்க உரிமையில்லாத காலகட்டத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லையா? அவ்வாறு மார்பு மறைத்து, கோவிலில் நுழையும் உரிமை கிடைத்த பிறகும் கூட அந்த உரிமையை சீர்குலைப்பதற்கான போராட்டங்கள் நடக்கவில்லையா இங்கே..? பெண்களே கூட அதற்கெதிராக களமிறங்கினார்கள்...அதோடு மார்பு மறைத்தவர்களின் மாராப்பை, மார்பு மறைக்காத பெண்களே கிழித்தெறியத் துணிந்தார்கள்.
இதெல்லாம் நமது மாநிலத்தின் வரலாறல்லவா? ஆனால், நாம் அங்கேயே நின்று கொண்டிருக்கிறோமா? ‘எங்களுக்கு மார்பை மறைக்க வேண்டாம்’ என்று கூறிய பெண்களுடனா இந்த நாடு நின்றது...? காலம் அவர்களுடனா நின்றது...?காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப சடங்குகளும் வழக்கங்களும் மாறுவதில்லையா?
முன்பு, இங்கே பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது பெரிய மாற்றமாக இருக்கவில்லையா? நமது சமூகத்தின் முன்னேறிய பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டார்களா? பிற்போக்கு சக்திகள் அதற்கெதிராக நிற்கவில்லையா? சுருக்கமாகச் சொன்னால், என்னென்ன சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடந்துள்ளனவோ அந்த கட்டங்களில் எல்லாம் அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
முன்பிருந்த நிலை என்னவாக இருந்தது? பிராமணர்களிடமிருந்து 64 அடி தூரத்தில் பறையர் நிற்க வேண்டும். 54 அடி தூரத்தில் புலையர் நிற்க வேண்டும். 36 அடி தூரத்தில் ஈழவர் நிற்க வேண்டும். ஈழவர்களிடத்திலும் தீண்டாமை வழக்கமிருந்தது. ஈழவர்களிடமிருந்து 30 அடி தூரத்தில் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிற்க வேண்டும். என்னவெல்லாம் தவறான பழக்கவழக்கங்கள் நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன? இதுபோன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலனாகத்தானே, இவையெல்லாம் மாறின? அதற்கு உறுதியான தொடர்ச்சிகளும் ஏற்பட்டன.
நமது மாநிலத்தில் மேலோங்கி வந்த பலவேறு இயக்கங்கள் விவசாயிகளின் இயக்கம், தொழிலாளர்களின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றின் தலையீடுகள், இந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு முன்னேறிச் சென்றன. அதுதானே இந்த மாநிலத்தை மாற்றின? இந்த மாநிலத்தின் இதுபோன்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இப்பொழுதும் உள்ளன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள் தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குருதேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது.
நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைபாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்...உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்...? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல...நமது சிவனைத் தான் நாம் பிரதிஷ்டித்துள்ளோம்” அங்கு சடங்கு மீறல் தான் நடத்தப்பட்டது.
அதன்பிறகு, அதே குரு. “இனி கோவில்களையல்ல...பள்ளிக்கூடங்களைக் கட்டுவது தான் மக்களுக்கான தேவை” என்று தானே சொன்னார்.....அங்கேயும் சடங்கு மீறல்கள் தானே தென்படுகிறது? அப்படியென்றால், சடங்குகள் மீறப்பட வேண்டியது என்று தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.
அய்யன்காளியின் வில்வண்டிப் போராட்டத்தைப் பாருங்கள்...பொட்டு வைத்து, பட்டுத் தலைபாகை வைத்து, கோட்டு அணிந்து....அன்று அதற்கெல்லாம் உரிமை இருந்ததா? பொட்டு வைக்க உரிமை இருந்ததா? பட்டுத் தலைப்பாகை வைக்க உரிமை இருந்ததா? கோட்டு அணிய உரிமை இருந்ததா? அப்படியென்றால், உரிமையில்லை என்று சொன்னவர்களின் சட்டத்தோடு சேர்ந்து நிற்காமல், ‘எங்களுக்கு உரிமை உண்டு’ என்று கூறி, அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் நின்றார்கள்.
கடந்த வருடம் என்று தான் நினைக்கிறேன்...
இங்குள்ள ஊரூட்டம்பலம் ஆரம்பப்பள்ளிக்குச் சென்ற போது, அங்கே பாதி எரிந்துபோன பெஞ்சை நான் பார்க்க நேர்ந்தது. அது...எந்த பெஞ்சு தெரியுமா? பஞ்சமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியைப் பள்ளியில் அமரவிடவில்லை என்று கேள்விப்பட்ட போது, அந்த சிறுமியையும் அழைத்துக்கொண்டு, அய்யன்காளி தட்டிக்கேட்க வருகிறார் என்று கேள்விப்பட்ட மேல்ஜாதியினர் அந்த பள்ளிக்கே தீ வைத்தார்கள். அதில் முற்றும் எரிந்து போன பள்ளியிலிருந்து, எஞ்சிய இந்த எரிந்த, துண்டு பெஞ்சு மட்டும் கிடைத்தது. அதைத்தான் நான் அங்கு காண நேர்ந்தது. அவ்வாறு நமது மாநிலத்தில் வெவ்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அப்படித்தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது.
அத்தகைய போராட்டங்களில்...
அடையாளத்திற்காக மேல்ஜாதியினரால் அணிய வைக்கப்பட்ட கல் மாலையை அறுத்தெறிய நடத்தப்பட்ட போராட்டம்...
உடன் அமர்ந்து படிக்க நடத்தப்பட்ட போராட்டம்...
படித்த பிறகு...
வேலைகிடைப்பதற்கான போராட்டம்...
பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம்...
கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான போராட்டம்...
இத்தகைய வெவ்வேறு போராட்டங்கள் மூலம் தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே பாரதிய ஜனதா கட்சி நாட்டையாளும் கட்சியல்லவா? அக்கட்சியின் நிலைபாட்டை தனியாக நாம் பரிசீலிக்கவேண்டும். மகாராஷ்டிராவில் சனி தேவனின் ஒரு திருத்தலம் உள்ளது....ஒரு கோவில். அங்கு சனிதேவன் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். சனி சிக்னாபூர் என்பது தான் அந்தக் கோவிலின் பெயர். அந்தக் கோவிலில் எக்காலத்திலும் பெண்கள் நுழைந்ததில்லை. பெண்கள் அக்கோவிலுக்குள் செல்லவே கூடாதாம். சனிதேவன் பெண்களைப் பார்க்கவே கூடாது என்பதுதான் அங்குள்ள நிலைமை. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் 'பெண்களுக்கு கோவிலுக்குள் செல்ல உரிமை உண்டு' என்று தீர்ப்பளித்தது. அங்கே பாஜக அரசு தான் உள்ளது. அவர்கள் அந்தத் தீர்ப்பை அமுல்ப் படுத்தினார்கள். இப்போது பெண்கள் அந்தக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படியென்றால், பாஜக ஆளும் மாநிலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தலாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் மாநிலத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்தாலும் அமுல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். இது என்ன மாதிரியான இரட்டை நிலைப்பாடு?
அங்கே அதுபோலவே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பு...மும்பைக்கு அருகே ஹாஜி அலி தர்கா...அங்கே பெண்களை செல்ல அனுமதிக்கவேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், நீதிமன்றம் பெண்கள் அந்த மசூதியில் செல்ல அனுமதித்தது. அந்த மசூதியில் பெண்கள் செல்கிறார்கள். இதெல்லாம் மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்களாகும்.
அதோடு இடதுமுன்னணி அரசு சமூக சீர்திருத்த பாரம்பரியத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறது. நமது கோவில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூசாரிகள் ஆகாலாம். அது, நமது தேசமே பெரும் ஆதரவளித்து வரவேற்ற ஒன்றாகும். சாதாரணமாக எல்லோரும் பூசாரிகள் ஆகிவிட முடியாது என்பது போன்ற, மேல்ஜாதி ஆதிக்கம் நிறைந்த விதிமுறைகளை எழுதியவர்கள் உட்பட எல்லோரும், “எல்லா ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தால் பூசாரி ஆவதற்கு தடையேதுமில்லை” என்ற நிலைபாட்டை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே தான், அறநிலையத்துறை ஊழியர்களின் நியமனத்தில் பட்டியலினத்தவர்கள், மலைவாழ் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தினோம். உயர்வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளவர்களுக்கு, அறநிலையத்துறை ஊழியர் நியமனத்தில் தனியாக இடஒதுக்கீடு செய்யும் ஒரு முறையும் மாநில அரசு அமுல்ப்படுத்தியுள்ளது. இதெல்லாம், சமூக சீர்திருத்த மரபின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
இங்கே காங்கிரசார் எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கட்சிக் கொடியின்றி பாஜக தலைமை தாங்கும் போராட்டத்தில் பங்கேற்றால், நீங்கள் காங்கிரஸ் அல்ல என்று ஆகிவிடுவீர்களா..? ஆமாம்...காங்கிரஸ் இல்லையென்று ஆகிவிடும் நிலை உங்களுக்கு நிச்சயம் ஏற்படும்....நாளை அவர்கள் பாஜக ஆகிவிடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரசுடன் இணைந்து நிற்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது...அது அரசியலமைப்புச்சட்டம் பற்றிய ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வை ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க வேண்டுமென்று தான் ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதை அவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்திய பாராளுமன்றத்திலேயே கூறிவிட்டார்கள். ஆனால் இப்போது ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை காங்கிரசாரும் உயர்த்திப்பிடிக்கிறார்கள். அது, “எல்லாவற்றையும் விட உயர்ந்தது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கையே முக்கியம்....அரசியலமைப்புச்சட்டத்தின் மதிப்புமிக்க அம்சங்களை விட சட்டங்களைவிட நம்பிக்கையே முக்கியம்” என்பதாகும். இந்த வாதத்துடன் இணைந்து நிற்பவர்கள் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை சரியான விதத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்களா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த வாதத்துடன் அணிதிரள்வதாக செய்திகள் வருகின்றன. முஸ்லீம் லீக் தலைவர்களும் உணர்ச்சிவசப்பட்டு இந்த வாதத்துடன் அணிவகுக்கிறார்கள். நீங்கள் இந்த வாதத்தை கொஞ்சம் விரிவுபடுத்திப் பாருங்கள். பாபர் மசூதி விவகாரத்தில்...எங்கே போய் முடியும்? நம்பிக்கைதான் முக்கியம் எனில், இராமர் கோவில்தான் அது என்று கூறும் நம்பிக்கையோடு அல்லவா இணைந்து நின்றிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-ம் அந்த வாதத்தோடு தான்...பாஜக-வும் அந்த வாதத்தோடு தான்... காங்கிரசும் மிகச்சரியாக அந்த வாதத்தோடு தான், அக்காலத்தில் நின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்...இந்த வாதத்தின் பின்னால் உள்ள ஆபத்து என்னவென்று சரியான முறையில் யார் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நமது நாட்டில், சங் பரிவாரங்கள் உரிமை கொண்டாடுவது ஒரு பாபர் மசூதியின் மீது மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் மீது அவர்களின் உரிமைவாதம் இருக்கிறது. இது எங்களது ஆராதனாலயம் என்று கூறுகின்ற உரிமைவாதத்தை முன்வைக்கிறார்கள்.
எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றால் நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று...நிதானமாக சிந்தித்தால் போதும்...சிந்திக்க முடிந்தால்...இவ்வாறு நம்பிக்கையின்பால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதை மட்டும் நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...
நாம் கவனமாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், எது அவர்களின் குறிக்கோள் என்பதே....அரசைத் திட்டுவதோ...இடதுஜனநாயக முன்னணியைத் திட்டுவதோ அல்ல...மாறாக அவர்களின் உண்மையான நோக்கம் கேரளத்தின் மதசார்பற்ற சிந்தனையைத் தகர்ப்பதே ஆகும். அதை அனுமதிக்க வேண்டுமா? என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி. அதை அனுமதிக்கவே முடியாது. நாம் உறுதியாக இத்தகைய முன்னெடுப்புகளை எதிர்த்து நின்று போராடியிருக்கிறோம். மதசார்பற்ற சிந்தனைகளை எதிர்க்கவும், மதசார்பற்ற எண்ணங்களை தகர்க்கவும் நடத்தப்படும் முயற்சிகளை, நாம் எல்லோரும் இணைந்து முறியடிக்க வேண்டும். மதநம்பிக்கையாளர்கள் உட்பட உள்ள அனைவரும், அதற்காக அணிதிரண்டு களத்திலிறங்கிப் போராட வேண்டுமென்று இந்நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
வாழ்த்துகள்...!